சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ரவிசந்திரன் அஸ்வின் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இது தவிர, அதே டெஸ்ட் தொடரில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்தநிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரவிசந்திரன் அஸ்வினுக்கு பாராட்டு விழா நடத்தியது. 


அப்போது, அஸ்வினுடன் உடன் விளையாடிய வீரர்கள், கோச் உள்ளிட்ட பலரும் அஸ்வினில் விளையாட்டு திறன் குறித்து பேசினார். அந்தநேரத்தில்தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்து ரவீந்திர ஜடேஜா, தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில்தான், அஸ்வினுடன் விளையாடியது குறித்தும், அவருடன் சர்வதேச மற்றும் ஐபிஎல் போட்டிகளில் டிரஸ்ஸிங் ரூம் ஷேர் செய்தது தொடர்பாக ரவீந்திர ஜடேஜா வீடியோ மூலம் பேசினார். அப்போது அவர், “நானும் அஸ்வினும் பல்வேறு சாதனைகளை மட்டுமல்ல, டிரஸ்ஸிங் ரூமை மட்டுமல்ல, ரவி என்ற எங்களது பெயரையும் ஷேர் செய்துள்ளோம். 


நான் ரவி இந்திரன் (ரவீந்திர ஜடேஜா), நீ ரவிசந்திரன்! (ரவிசந்திரன் அஸ்வின்). நீ வலது கை சுழற்பந்துவீச்சாளர் ப்ரம் சென்னை. மீசை வச்சவன் ரவீந்திரன், மீசை வைக்காதவன் ரவிசந்திரன்” என ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘தில்லு முல்லு’ படத்தில் டைலாக்களை பேசினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 






அஸ்வினின் பாராட்டு நிகழ்ச்சியின்போது அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரன், அவரது மனைவி பிரித்தி மற்றும் மகள்கள் சேப்பாகத்தில் அவருடன் இருந்தனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அவருக்கு 100 டெஸ்ட் மற்றும் 500 விக்கெட்டுகளுக்கான நினைவு பரிசுகளை வழங்கியது. மேலும், அஸ்வினுக்கு செங்கோலும், 1 கோடி ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கியது. 


இந்த நிகழ்ச்சியின்போது முன்னாள் இந்திய வீரரும், பிசிசிஐ தலைவருமான ரோஜர் பின்னியும், அஸ்வினுக்கு புகழாரம் சூட்டினார். அப்போது பேசிய அவர், “இது போன்ற அற்புதமான சாதனையை (அஸ்வினின் சாதனை) கௌரவிக்க இன்று மாலை இங்கு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அஸ்வின் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். சுழற்பந்து வீச்சு புதிய உயிரை கொடுத்துள்ளார் அஸ்வின். அவருக்கு எனது வாழ்த்துகள். வருங்காலங்களில் இன்னும் சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார். 


தொடர்ந்து முன்னாள் பிசிசிஐ மற்றும் டிஎன்சிஏ தலைவர் என் ஸ்ரீனிவாசன் அஸ்வினின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை பாராட்டினார். இதுகுறித்து பேசிய அவர், "(இந்தியாவுக்காக) தேர்வு செய்யப்படுவதே கடினம். ஆனால், நீங்கள் இத்தனை ஆண்டு காலம் விளையாடி பல்வேறு சாதனைகளை குவித்துள்ளார். தொடர்ந்து, நீங்கள் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். உங்கள் பயணத்தில் உள்ள தடைகளைத் தாண்டி இன்னும் அதிகபடியான உயரத்திற்கு முன்னேற வேண்டும். இவ்வாறு 500 விக்கெட்டுகளை எடுத்தது குறிப்பிடத்தக்க சாதனையாகும். அதோடு இவரால் பேட் செய்யவும் முடியும். பல்வேறு டெஸ்ட் சதங்களையும் அடித்துள்ளார். ரவிசந்திர அஸ்வினின் ஆஃப் ஸ்பின் பந்துவீச்சின் எப்போதும் சிறந்த எடுத்துக்காட்டு” என தெரிவித்தார்.