இரண்டாவது முறையாக சாம்பியனான இந்தியா:


கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. கடந்த 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு 17 ஆண்டுகள் கழித்து ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரம் இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தாலும் இரண்டு நாட்களாக அவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தும் செய்தியும் அடுத்தடுத்து வருகிறது.


கோலி, ரோகித் ஓய்வு:


அதாவது இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள் அடுத்தடுத்து சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு விராட் கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர், "இதுதான் எனது கடைசி டி20 உலகக் கோப்பை தொடர். இதைத்தான் நான் சாதிக்க வேண்டும் என விரும்பினேன். ஒரு நாள் ரன் எடுக்க முடியாது என்ற எண்ணம் உங்களுக்கு வரும். கடவுள் மிகப் பெரியவர். இப்போது இல்லை என்றால் எப்போது என்ற தருணம் எங்களுக்கு இது. இந்திய அணிக்காக நான் விளையாடும் கடைசி டி20 போட்டி இதுதான்.


உலகக் கோப்பையை கைகளில் ஏந்த வேண்டும் என்று விரும்பினேன். அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கான நேரம் இது. அவர்கள் டி20 ஆட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். இது எங்களின் நீண்ட காத்திருப்பு. அதாவது ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டுமென்ற காத்திருப்பு. ரோஹித் சர்மாவுக்கு இது 9வது டி20 உலகக் கோப்பை தொடர். எனக்கு 6வது தொடர். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடினம். இந்த நாள் அற்புதமான நாள். நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று கூறியிருந்தார்.


ஹிட்மேன் ரோகித்தும் ஓய்வு:


இது ரசிகர்களின் நெஞ்சில் இடியாய் விழுந்தது. இந்த சோகத்தில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் அடுத்த சில மணி நேரங்களில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர்,"இந்த டி20 உலகக் கோப்பை தொடர் தான் என்னுடைய இறுதிப் போட்டி.


ஓய்வு பெறுவதற்கு இதை விட சிறந்த தருணம் இல்லை. நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்பினோம். இதனை வார்த்தைகளால் கூறுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதுவே நான் விரும்பியது. இந்தியாவுக்காக கோப்பையை வென்றுவிட்டு ஓய்வை தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போது வென்றுவிட்டேன். குட்பை சொல்லும் நேரம் இது. ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்" என்று கூறினார்.


ஓய்வை அறிவித்த ஜடேஜா:


நேற்று ஜாம்பவான் வீரர்கள் ஓய்வை அறிவித்த நிலையில் இன்று (ஜூன் 30) மற்றொரு ஜாம்பவான் வீரரான ரவீந்திர ஜடேஜாவும் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். இது தொடர்பாக ரவீந்திர ஜடேஜா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "நன்றி நிறைந்த இதயத்துடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடைபொறுகிறேன். உறுதியான குதிரையைப் போல பெருமையுடன் துள்ளிக்குதிப்பதை போல, நான் எப்போதும் எனது சிறந்த எல்லாவற்றையும் கொடுத்துள்ளேன்.


மற்ற வடிவ போட்டிகளில் விளையாடுவேன். அசைக்க முடியாத நம்பிக்கையை கொடுத்த அனைவருக்கும் நன்றி" என்று கூறியுள்ளார். இரண்டு நாட்களில் அடுத்தடுத்து இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.