ODI World Cup: இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் கலந்து கொள்வது குறித்து முடிவு எடுக்க ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. 


இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி உலககோப்பத் தொடர் தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக போட்டி நடைபெறும் ஒவ்வொரு மைதானத்தையும் மேம்படுத்த  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மைதானத்திற்கு ரூபாய் 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 


முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளவுள்ளன. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த இலங்கை அணியும் மோதிக்கொள்ளவுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 


இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஆலோசனை நடத்தி எடுக்கப்படும் முடிவு பிரதமரிடம் தெரிவிக்கப்படும். இக்குழு இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பைத் தொடரில் கலந்து கொள்ளலாமா வேண்டாமா என்பது குறித்து இந்த ஆலோசனைக் குழு எடுக்கும் முடிவின்படிதான், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவுக்கு வருவது குறித்த முடிவு இருக்கும். 


ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் பாகிஸ்தான் அணி பங்கு பெறும் போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறக்கூடாது என நிபந்தனைகள் விதித்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்தியா பாகிஸ்தான் போட்டி அகமதாபாத்தில் தான் நடைபெறுவதாக அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அட்டவணை வெளியிடுவதற்கு முன்னர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உலககோப்பையில் பங்கு பெறும் அனைத்து நாடுகளுக்கும் அட்டவணையை அனுப்பி ஒப்புதல் பெற்றிருக்கும். நடைமுறை இப்படி இருக்கும்போது, பாகிஸ்தான் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.


பாகிஸ்தான் இவ்வாறு நடந்து கொள்வதற்கான காரணம், ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடமாட்டோம் என கூறியது மட்டும் இல்லாமல், போட்டியையும் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றியுள்ளனர். இதனை மனதில் வைத்து தான் பாகிஸ்தான் அணி இவ்வாறு நடந்து கொள்கிறது எனவும் கிரிக்கெட் வட்டாரத்தில்  பேச்சுகள் அடிபடுகின்றன. 


உலகககோப்பைக்கான தகுதிச் சுற்றும் முடிவடைந்து  10 அணிகள் எவையெவை என அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ள நிலையில், உலகக்கோப்பைக்கு அனைத்து அணிகளும் தீவிரமான தயாராகி வருகின்றது. கிரிக்கெட் உலகம் இப்படி இயங்கும் போது பாகிஸ்தான் அணியின் நடவடிக்கை ஐசிசி மற்றும் பிசிசிஐக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.