பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதன்மூலம் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. 


பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ராவல்பிண்டியில் முதல் டெஸ்டிலும், முல்தானில் நடந்த இரண்டாவது டெஸ்டிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. 


கராச்சியில் தற்போது 3வது மற்றும் கடைசி டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, பேட்டிங் செய்த பாகிஸ்தான் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே விக்கெட்களை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹாரி புரூக் சதம் அடித்து அசத்தினார்.  இங்கிலாந்து அணி 81.4 ஓவர்கள் முடிவில் 354 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது. 


50 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர்களான ஷாபிக் 26 ரன்களும், ஷான் மசூத் 24 ரன்களில் நடையைகட்டினர். இந்த டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுபெறும் அசார் அலி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். 


பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமு, ஹாகிலும் அரைசதமும் அடித்து வெளியேற, பின்வரிசை வீரர்களும் தங்கள் விக்கெட்டை அறிமுக வீரர் ரெஹான் அஹ்மத்திடம் விட்டுகொடுத்தனர். பாகிஸ்தான் அணி 74.5 ஓவர்களில் 216 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 


தொடர்ந்து, இங்கிலாந்து அணி 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடக்க வீரர்களாக பென் டக்கட் மற்றும் ஜாக் க்ராவ்லி களமிறங்கினர். சற்று எளிய இலக்கு என்பதால் 3ம் நாளான நேற்று இருவரும் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தனர். இருவரும் இணைந்து 11 ஓவர்களில் 87 ரன்கள் குவிக்க, அதிரடியாக விளையாடிய க்ராவ்லி 41 ரன்களில் ஆட்டமிழந்தார். 


அடுத்ததாக களமிறங்கிய அறிமுக வீரர் ரெஹான் அகமது 10 ரன்களில் வெளியேற, இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பென் டக்கட்டுடன் இணைந்தார். இருப்பினும் 3ம் நாள் முடிவுக்கு வர 17 ஓவர்கள் முடிபில் 2 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. 


வெற்றிக்கு இன்னும் 55 ரன்களே இருந்தநிலையில் 4ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே வெற்றிக்கு தேவையான ரன்களை இருவரும் குவித்து அசத்த, 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரையும் 3-0 என்ற கணக்கில் வென்றது. 


சாதனைகள்:



  • பாகிஸ்தான் அணியை ஒயிட்வாஷ் செய்ததன் மூலம் பாகிஸ்தான் மண்ணில் பாகிஸ்தான் கிளீன் ஸ்பீப் செய்த முதல் அணி என்ற பெருமையை இங்கிலாந்து அணிபெற்றுள்ளது.

  • பாகிஸ்தானின் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை ஹாரி செரிங்டன் புரூக் படைத்துள்ளார். முன்னதாக கடந்த 1983ம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் 449 ரன்கள் இங்கிலாந்து வீரர் டேவிட் கோவர் குவித்திருந்தார். தற்போது ஹாரி புரூக் 468 ரன்கள் குவித்து முறியடித்தார்.

  • அறிமுகமான போட்டியிலேயே 5 விக்கெட்களை வீழ்த்தி இளம் பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் ரெஹான் அஹமத் படைத்துள்ளார்.

  • பாகிஸ்தானின் அசார் அலி இந்த போட்டிக்குப் பிறகு தனது கேரியருக்கு விடைபெற்று ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

  • ஒரு காலண்டர் ஆண்டில் 4 சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்த முதல் பாகிஸ்தான் கேப்டன் என்ற பெருமையை பாபர் ஆசம் பெற்றார்.