இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. சுமார் 1,338 நாட்களுக்கு பின் சொந்த மண்ணில் கிடைத்த டெஸ்ட் வெற்றியால் அந்த அணியின் கேப்டன் ஷான் மசூத் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


முக்கியமான வெற்றி:


இந்த நிலையில் வெற்றி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் பேசியுள்ளார். அதில்,"முதல் வெற்றி எப்போதும் முக்கியமானது. கடினமான காலங்களுக்கு பின் இந்த வெற்றி எங்களுக்கு கிடைத்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் ஏராளமான விஷயங்கள் நடந்துள்ளன. இங்கிலாந்து அணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதுதான் மிகவும் நிறைவான விஷயம். அதற்காக நிச்சயம் பாகிஸ்தான் அணியை பாராட்ட வேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் வெற்றிக்கான பசியுடன் இருக்கிறார்கள். அவர்களின் பயிற்சியையும், முயற்சியையும் யாரும் சந்தேகப்பட முடியாது.


அதேபோல் 20 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல், இரு இன்னிங்ஸ்களிலும் நிறைவான ஸ்கோரை குவித்துள்ளோம். இம்முறை எங்களின் திட்டங்கள் மாறிவிட்டது. வங்கதேச அணிக்கு எதிராக வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினோம். அப்போது எந்த சாதகமும் கிடைக்கவில்லை. சில நேரங்களில் எதிரணியின் பலத்தையும் கவனிக்க வேண்டும். பிட்சில் எந்த மாதிரியான உதவி கிடைக்கும் என்பதை பார்க்க வேண்டும். முல்தான் மைதானத்தில் அதிகளவிலான கிரிக்கெட் விளையாடியதில்லை"என்று கூறினார்.


பாகிஸ்தான் அணியின் ஒவ்வொரு வீரருக்கும் சொந்தமானது:


தொடர்ந்து பேசிய அவர்,"2 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு போட்டியில் ஸ்பின்னர்களுக்கு கொஞ்சம் உதவி கிடைத்தது. அதனால் இம்முறையும் அதனை முயற்சிக்கலாம் என்று நினைத்திருந்தோம். சாஜித் கான் மற்றும் நோமன் அலி இருவருக்கும் முதல் போட்டியில் விளையாடுகிறார்கள். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் கொண்டவர்கள் போல் அவர்களின் செயல்பாடுகள் இருந்தது. பாகிஸ்தான் அணிக்கு 3வது பவுலரே 2வது இன்னிங்ஸில் தேவைப்படவில்லை.


இந்த வெற்றி பாகிஸ்தான் அணியின் ஒவ்வொரு வீரருக்கும் சொந்தமானது என்று நினைக்கிறேன். ஏனென்றால் 20, 30 ரன்களும் முக்கியமானது. அதேபோல் கம்ரான் குலாம் ஆட்டத்தை மறக்கக் கூடாது. ஏனென்றால் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான பாபர் அசாம் இடத்தில் கம்ரான் குலாம் களமிறக்கப்பட்டார். குழுவாக இணைந்து வெற்றியை பெற்றோம்"என்று கூறியுள்ளார்.