ஆஸ்திரேலிய தொடரில் முகமது ஷமி இடம் பெறுவாரா என்பது தொடர்பாக ரோஹித் ஷர்மா பதிலளித்துள்ளார்.


இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்:


வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன்படி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணியை எதிர்கொண்டது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்ற்றும் 3 டி20 போட்டிகளிலும் வென்று இந்திய அணி மொத்தமாக தொடரை கைப்பற்றியது.


இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டிகள் நாளை அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உள் நாட்டில் நடைபெறும் இந்த போட்டியில் நியூசிலாந்தை எதிர் கொள்ள தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இன்று (அக்டோபர் 15) செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.


ஆஸ்திரேலிய தொடரில் முகமது ஷமி இடம் பெறுவாரா?


அதில், "நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், ஆஸ்திரேலிய தொடரில் முகமது ஷமி இடம் பெறுவாரா என்பது சொல்வது மிகவும் கடினம். ஏனென்றால் அவருடைய உடல் தகுதியை மீட்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. காலில் முட்டி பகுதியில் வீக்கம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே அவர் தற்போது மீண்டும் ஓய்வில் இருக்கிறார். இதில் அடுத்து மீண்டும் அவர் தன்னுடைய உடல் தகுதியை மீட்கும் பணியில் ஆரம்பிக்கப் போகிறார்.


தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி உள்ள சமியை மருத்துவர்களும் பிசியோ நிபுணர்களும் கண்காணித்து வருகின்றனர்.ஒரு ஆண்டாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத ஷமியை ஆஸ்திரேலிய தொடரில் பயன்படுத்த நாங்கள் விரும்பவில்லை. எனினும் அவர் முழு உடல் தகுதியை பெற வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கின்றேன்"என்று ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.


முன்னதாக, இந்திய அணியின் நட்சத்திர வீரரான முகமது சமி கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பிறகு எந்த ஒரு போட்டிகளிலும் காயம் காரணமாக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.