ODI World Cup 2027: வரும் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்து ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி உறுதியளிக்கவில்லை என்று இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.
ரசிகர்கள் ஷாக்:
இந்திய கிரிக்கெட் அணி வரும் அக்டோபர் 19 ஆம் தேதி தொடங்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் அக்டோபர் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அந்த வகையில் இதுவரை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் ஷர்மாவை நீக்கி விட்டு அவரை சாதாரண வீரராக அறிவித்தது பிசிசிஐ.
அதே நேரம் இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். மேலும், துணை கேப்டனாக ஸ்ரேயாஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது பெரும்பாலான ரசிகர்களிடம் விமர்சனத்தை எழுப்பியுள்ள நிலையில் ஒரு நாள் போட்டிகளில் இருந்தும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஓய்வை அறிவிப்பதற்கான நேரம் வந்து விட்டது என்பதையே காட்டுகிறது என்று சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இச்சூழலில் தான் அடுத்த அடியாக அஜித் அகர்கர் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.
அதாவது 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை ஒரு நாள் போட்டியில் விளையாடுவது குறித்து சீனியர் வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இதுவரை உறுதியளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
ரோஹித் - விராட் விளையாடுவார்களா?
இது தொடர்பாக இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறுகையில், “விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவது பற்றி உறுதியாக இல்லை. அவர்கள் பல ஆண்டுகளாக ரன்களை குவித்து வருகின்றனர். அவர்கள் இன்னும் டிரஸ்ஸிங் ரூமில் முன்னணியில் உள்ளனர். ஒரு நாள் போட்டிகளில் அவர்கள் மிகவும் வெற்றிகரமாக உள்ளனர்”என்று கூறியுள்ளார்.