ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை குறித்து ஐசிசி மற்றும் பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படவுள்ளது. 


அதாவது, இம்முறை டிக்கெட் வாங்கும் முன் பதிவு செய்து கொள்ளலாம். அதாவது டிக்கெட்டுகள் வேண்டும் என நினைப்பவர்கள் முதலில் முன்பதிவு செய்து டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். அதன்படி ஆன்லைன் டிக்கெட் பதிவு ஆகஸ்ட் 15 முதல் தொடங்குகிறது. ஆகஸ்ட் 25 முதல் டிக்கெட் விற்பனை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்பவர்கள் https://www.cricketworldcup.com/register என்ற வலைதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். ஒருநபர் எவ்வளவு டிக்கெட்டுகள் பதிவு செய்துகொள்ளலாம் என்பது குறித்து எந்த அறிவிப்பும் அதில் தெரிவிக்கப்படவில்லை. 


இந்தியாவைத் தவிர அனைத்து அணிகளின் பயிற்சி  மற்றும் உலகக்கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 25ஆம் தேதி விற்பனை செய்யப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது. கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்தியாவின் பயிற்சிப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தியா-ஆஸ்திரேலியா, இந்தியா-ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா-வங்காளதேசம் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் எனவும் இந்தியா vs நியூசிலாந்து, இந்தியா vs இங்கிலாந்து மற்றும் இந்தியா vs இலங்கை ஆகிய போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 1 ஆம் தேதி விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. 


அதேபோல் ஈடன் மைதானத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்குகிறது. பெங்களூருவில் நடக்கும் இந்தியா மற்றும் நெதர்லாந்து போட்டிக்கான டிக்கெட்டுகளும் செப்டம்பர் 2ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேபோல், அரையிறுதி  மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. 


மாற்றி அமைக்கப்பட்ட அட்டவணை


இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஐசிசி மற்றும்  இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 


”இந்த ஆண்டு ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட போட்டி வேறு ஒரு நாளுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மற்ற எட்டு போட்டிகளின் நேரங்களும் மாற்றப்பட்டுள்ளன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி முதலில் அக்டோபர் 15, ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் இது ஒரு நாள் முன்னதாக மாற்றப்பட்டு இப்போது அக்டோபர் 14 சனிக்கிழமை அன்று அதே இடத்தில் நடைபெறும்”  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் அந்த அறிக்கையில், டெல்லியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்தின் போட்டி அக்டோபர் 14 சனிக்கிழமையிலிருந்து மாற்றப்பட்டுள்ளது. அதாவது, இந்த போட்டி அக்டோபர் 15 ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும். ஹைதராபாத்தில் இலங்கைக்கு எதிரான பாகிஸ்தானின் போட்டி அக்டோபர் 12 ஆம் தேதியில் இருந்து இப்போது அக்டோபர் 10 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் லக்னோவில் நடைபெறும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆஸ்திரேலியா அணி களமிறங்கும் போட்டி அக்டோபர் 12 நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 




இதேபோல், பங்களாதேஷுக்கு எதிரான நியூசிலாந்தின் ஆட்டம் முதலில் சென்னையில் அக்டோபர் 14 ஆம் தேதி பகல் ஆட்டமாகத் திட்டமிடப்பட்டது, இப்போது அக்டோபர் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு பகல்-இரவு போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.