உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் இறுதிகட்டத்திற்கு வந்துவிட்டது. இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இந்த தொடர் தொடங்கியது முன்பு இந்திய அணிக்கு ஏராளமான சவால்கள் காத்திருந்தது. இந்திய அணியில் ஏராளமான பின்னடைவுகளும் இருந்தது.


வீரனாக அவருக்கு மிஸ்ஸான உலகக்கோப்பை:


அத்தனை சறுக்கல்களையும் உடைத்தெறிந்து தொடர் வெற்றிகளுடன் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு காரணமாக ரோஹித், விராட், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ், சுப்மன்கில், முகமது ஷமி, சிராஜ், பும்ரா, ஜடேஜா, குல்தீப் என இந்திய அணியில் ஒவ்வொருவரின் பெயரையும் சொன்னாலும், அத்தனை பெயர்களுக்கும் பின்னால் ராகுல் டிராவிட் என்ற பெயரே உள்ளது. ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஒதுங்கிய பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார் ராகுல் டிராவிட்.


இந்த உலகக்கோப்பை ரோகித் சர்மா, விராட்கோலி, முகமது ஷமி ஆகியோருக்கு எந்தளவு முக்கியமோ அதைவிட ராகுல் டிராவிட்டிற்கு மிக மிக முக்கியம் ஆகும். 1999ம் ஆண்டு, 2003ம் ஆண்டு ஒரு வீரராக உலகக் கோப்பையைத் தவறவிட்ட ராகுல் டிராவிட், 2007ம் ஆண்டு ஒரு கேப்டனாக லீக் சுற்றிலே தோற்று வெளியேறினார். அதுவும் வங்கதேச அணிக்கு எதிரான தோல்வி இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. 2011ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு முன்பு அணியில் இருந்து ஓய்வும் பெற்றுவிட்டார்.


பயிற்சியாளர் டிராவிட்:


மூன்று முறை உலகக்கோப்பையை ஒரு வீரராக தவறவிட்ட ராகுல் டிராவிட்டிற்கு, இந்த உலகக்கோப்பையை ஒரு பயிற்சியாளராக கையில் ஏந்தும் வாய்ப்பு தற்போது கிட்டியுள்ளது. உலக கிரிக்கெட் அரங்கில் ராகுல் டிராவிட் போன்ற ஒரு வீரரை பார்க்கவே முடியாது. தற்போது வரை இந்திய அணியில் அவருக்கு மாற்றாக ஒரு வீரர் உருவாக்கப்படவில்லை, உருவாகவில்லை என்பதே உண்மை.


ஏனென்றால், டெஸ்டில் ஆமை வேகத்தில் ஆடும் அவர் ஒருநாள் மற்றும் ஐ.பி.எல், போட்டிகளில் அசுர வேகத்திலும் ஆடியுள்ளார். எந்த போட்டியில் எப்படி ஆட வேண்டும்? என்பதை ராகுல் டிராவிட்டிடம் இருந்துதான் கற்க வேண்டும். அப்படி ஒரு பேட்டிங்கை அவர் ஒவ்வொரு வடிவிலான போட்டிகளிலும் ஆடியுள்ளார். ஒரு இந்திய கிரிக்கெட்டராக அவர் அரசாட்சி நடத்தியது போல, ஒரு பயிற்சியாளராக வெற்றி பெற்றுள்ளாரா? என்றால் இந்த உலகக்கோப்பைக்கு முன்பு வரை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


முக்கிய தொடர்களில் தோல்வி:


ஏனென்றால், கடந்த 2021ம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக பதவியேற்றுக் கொண்ட பிறகு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடரான ஆசிய கோப்பை 2022ம் ஆண்டு தொடரில் சூப்பர் 4 சுற்றிலே வெளியேறியது. அதே ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் அரையிறுதியோடு வெளியேறியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் தோற்று மகுடத்தை கைப்பற்ற 2வது முறையாக கிடைத்த வாய்ப்பை இந்தியா கோட்டை விட்டது.


ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்தியா தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள், டெஸ்ட் தொடரை இழந்தது, இங்கிலாந்தில் நடந்த மறு அட்டவணைப்படுத்தப்பட்ட போட்டியை இழந்தது, வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்ததும் அவரது பயிற்சியின் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.


பல கேப்டன்கள்:


இது மட்டுமின்றி இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய அணியின் கேப்டன்சியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்த காலத்தில் ரோகித் சர்மா முழு நேர கேப்டனாக இருந்தாலும் தவான், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா என பல கேப்டன்கள் இந்திய அணியில் உருவாகினர். ஒவ்வொரு விதமான தொடருக்கும் ஒவ்வொரு விதமான அணி அனுப்பப்பட்டது. இதுவும் ராகுல் டிராவிட் மீது விமர்சனத்தை ஏற்படுத்தியது.


இந்த சூழலில்தான் இந்திய அணி நடப்பாண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையை வென்று கம்பேக் கொடுத்தது. பின்னர், தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்றுள்ளது. இந்த உலகக்கோப்பையிலும் முகமது ஷமி நியூசிலாந்து அணிக்கு முந்தைய போட்டி வரை பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டது பெரும் விமர்சனத்தை எழுப்பியது. அதன்பின்பு, ஷர்துல் தாக்கூர் உட்கார வைக்கப்பட்டு களத்தில் இறங்கிய முகமது ஷமி இந்திய அணியின் அடுத்தடுத்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறார்.


ஆசானாக மகுடம் சூடுவாரா?


பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் எந்த ஒரு பிரம்மாண்ட வெற்றியையும் பெற்றுத்தராத பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு தன் மீதான அத்தனை விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பே இந்த உலகக்கோப்பைக்கான இறுதிப்போட்டி.


அகமதாபாத் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினால் 3 முறை உலகக்கோப்பையை வீரராக தவறவிட்ட ராகுல் டிராவிட், பயிற்சியாளராக தன் முதல் முயற்சியிலே கோப்பையை முத்தமிட்டு, தன் மீதான அத்தனை விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார். மேலும், தன் கிரிக்கெட் வாழ்க்கையில் ஓய்வு பெற்ற பிறகு ஒரு ஆசானாக உலகக்கோப்பை மணிமகுடத்தையும் தனது தலையில் அலங்கரிப்பார்.