நியூசிலாந்து-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பங்களாதேஷ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி களமிறங்கியது. நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். 


அப்போது ஆட்டத்தின் 27ஆவது ஓவரை பங்களாதேஷ் அணியின் வீரர் எபாதத் ஹூசைன் வீசினார். அவர் வீசிய 5 பந்தை சந்தித்த வில் யங் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்தார். ஆனால் ஸ்லிபில் நின்ற வீரர் கேட்சை தவறவிட்டார். அதன்பின்னர் பந்து பவுண்டரி எல்லை கோட்டிற்கு அருகே சென்றது. அங்கு அதை தடுத்த தஸ்கின் அகமது பந்தை திரும்பி ஸ்டெம்பை நோக்கி வீசினார்.






அந்த த்ரோவை ஸ்டெம்ப் அருகே இருந்து யாரும் பிடிக்கவில்லை. இதனால் பந்து மறுமுனையில் இருக்கும் பவுண்டரி எல்லை கோட்டிற்கு சென்றது. இதன்காரணமாக நியூசிலாந்து அணிக்கு 7 ரன்கள் கிடைத்தது. ஒரே பந்தில் நியூசிலாந்து அணி 7 ரன்கள் எடுத்தது. பங்களாதேஷ் அணிக்கு விக்கெட்டாக மாற வேண்டிய பந்து 7 ரன்கள் விட்டு கொடுத்தது பெரும் சோகமாக அமைந்தது. ஏற்கெனவே முதல் டெஸ்ட்டில் ஒரு மோசமான ரிவ்யூ கேட்டு பங்களாதேஷ் வீரர்கள் செயல்பட்டது பெரும் காமெடியை ஏற்படுத்தியது. 






அதற்குபின்பு தற்போது இரண்டாவது டெஸ்டிலும் அவர்கள் ஃபீல்டிங்கில் சொதப்பியுள்ளது பெரும் காமெடியை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் அணியின் இந்த ஃபீல்டிங் தொடர்பாக பலரும் சமூக வலைதளங்களில் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


சற்று முன்பு வரை நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் டாம் லெதம் 168* ரன்களுடனும், டேவான் கான்வே 68* ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் வில் யங் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.


மேலும் படிக்க: சித்தார், ட்ரம்ஸ் கருவிகளுடன் இந்திய வீரர்களுக்கு கேப்டவுனில் உற்சாக வரவேற்பு- வைரல் வீடியோ!