வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இந்த இரண்டு தொடர்களிலும் வலது கை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்த இடத்திற்கு வருவதற்கு முகேஷின் கடுமையான பாதை மற்றும் போராட்டக் கதையை இங்கே பார்க்கலாம். கிரிக்கெட் வீரராக ஆவதற்காக தனது பயணத்தில் முகேஷ் குமார் நிறைய சவால்களை எதிர்கொண்டதாகவும், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திகான இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்ட பிறகு, தனது கனவு இப்போது தன் முன்னால் இருப்பதாகவும் முகேஷ் குமார் தெரிவித்தார். 

வரவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முகேஷ் குமார் பேசினார், அப்போது பேசிய அவர், “ என் கனவு இப்போது என் முன்னால் இருக்கிறது. நான் எப்போதும் இந்திய அணிக்காக இதே இடத்தில் இருக்கவே விரும்புகிறேன். இந்தியாவுக்காக டெஸ்டில் காத்திருப்பு வீரர் பட்டியலில் இருந்த நான், தற்போது அணியில் இடம் பிடித்தேன்” என தெரிவித்தார். 

கடந்து வந்த பாதை: 

முகேஷ் குமாரின் தந்தை காஷிநாத் சிங் அவர் கிரிக்கெட் விளையாடுவதை அனுமதிக்கவில்லை. அவரது தந்தையின் விருப்பப்படி, சிஆர்பிஎஃப்பில் சேர முயற்சித்தார். முகேஷ் குமார் இரண்டு முறை சிஆர்பிஎஃப் தேர்வில் தோல்வியடைந்தார். அதன்பிறகு கடந்த 2019ம் ஆண்ட்டு முகேஷ் குமாரின் தந்தை உயிரிழந்தார்.  

முன்னதாக, பீகாரின் 19 வயதுக்குட்பட்ட அணிக்காக முகேஷ் குமார் விளையாடினார். ஆனால், அதில் எந்த முன்னேற்றமில்லை. அதன் பின்னர், வங்காளத்தில் கிளப் கிரிக்கெட் விளையாட முடிவு செய்தார். வருமானத்திற்காக டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் களமிறங்கி ஒவ்வொரு போட்டிக்கும் ரூ 500 முதல் ரூ 5000 வரை பெற்றுள்ளார். 

அப்போது, முகேஷ் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு, 'எலும்பு எடிமா' நோயால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக அவரது முழங்காலில் அதிக தண்ணீர் தேங்கி வீக்கம் ஏற்பட்டது. இதனால் எந்தவொரு போட்டியிலும் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 

வாழ்க்கையை மாற்றிய முன்னாள் பெங்கால் வேகப்பந்து வீச்சாளர்:

முகேஷ் குமாரின் வாழ்க்கையை மாற்றியது முன்னாள் பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் ரணதேப் போஸ்தான். பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் 'விஷன் 2020' நிகழ்ச்சியில், போஸ் முகேஷின் திறமையைக் கண்டு, அப்போதைய பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் சவுரவ் கங்குலியிடம் போஸ் வற்புறுத்தினார். இதற்குப் பிறகு சங்கத்தினர் முகேஷின் உணவு மற்றும் பானங்களை முழுவதுமாக கவனித்து, அவருக்கு MRI செய்து மருத்துவச் செலவுக்கு ஏற்பாடு செய்தனர்.  

கடந்த 2015-16ல் முகேஷ் குமார், ஹரியானாவுக்கு எதிராக பெங்கால் அணிக்காக அறிமுகமானார் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டார். துல்லியமான யார்க்கர்களை வீசுவதில் நிபுணத்துவம் பெற்ற முகேஷ், ஐபிஎல் 2023ல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடினார். 

முகேஷ் குமார் பந்துவீச்சு புள்ளிவிவரங்கள்

வடிவம் போட்டிகள் இன்னிங்ஸ்கள் விக்கெட்கள் சிறந்த பந்துவீச்சு ஆவ்ரேஜ் எகானமி
முதல்தரம் 39 70 149 6/40 21.55 2.70
லிஸ்ட் ஏ 24 24 26 3/71 37.46 5.10
டி20 33 33 32 3/12 28.68 8.11