ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் சாம் ஹார்பர் பயிற்சியின் போது பந்து தாக்கியதில் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக்பாஸ் லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியும் ஒன்று. இந்த அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக இருப்பர் சாம் ஹார்பர். இவர் நேற்று வழக்கம்போல பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கெதிரான போட்டி இன்று நடக்கவிருந்த நிலையில் சாம் ஹார்பர் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ரேம்ப் ஷாட் ஆட முயன்ற போது பந்து சாமின் ஹெல்மெட்டின் அடியில் பலமாக தாக்கியது. இதில் அவரின் கன்னம் மற்றும் தொண்டை அருகே கடுமையான காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. 


உடனடியாக சாம் ஹார்பரை பரிசோதித்த ஸ்டார்ஸ் அணியின் மருத்துவ குழுவினர் அவரை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்ல முடிவெடுத்தனர். ஆனால் அதற்குள் சாம் ஹார்பர் சுயநினைவை இழந்து மயக்கமானார். மருத்துவமனையில் அவரது தாடை அல்லது கழுத்தில் ஏதேனும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதா என்பதை மருத்துவர்கள் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்து தொடர்ந்து சாம் ஹார்பரை கண்காணிப்பில் வைத்துள்ளனர். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் வெலியாகியுள்ளது. 


இந்த சம்பவத்தை தொடர்ந்து மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் பயிற்சி ஆட்டம் நிறுத்தப்பட்டது. மேலும் இன்று நடக்கும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் அவர் ஆடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் பேக்கப் விக்கெட் கீப்பர் இல்லை என்பதால் முன்னாள் மெல்போர்ன் ஸ்டார்ஸ் வீரரும், விக்டோரியா லிமிடெட் ஓவர்ஸ் அணியின் கேப்டனுமான பீட்டர் ஹேண்ட்ஸ் கோம்ப் ஒப்பந்தம் எதுவும் செய்யாமல் அழைக்கப்பட்டுள்ளார்.


இவர் வரும் ஜனவரி 28 ஆம் தேதி ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருவேளை சாம் ஹார்பர் மீண்டும் ஆட்டத்திற்கு திரும்பினால் ஹேண்ட்ஸ் கோம்ப் பயிற்சி ஆட்டத்தில் ஆடுவார். இல்லாவிட்டால் கேப்டன் மாற்றப்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேசமயம் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி சிட்னியில் நடந்த ஷெப்பர்ஷீல்டு கோப்பை தொடரில் தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய பிலிப் ஹியூஸ், நியூ நியூ சவுத்வேல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அபாட் வீசிய பவுன்சர் பந்து கழுத்தில் தாக்கியதில் பலத்த காயமடைந்து நினைவு திரும்பாமலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது. அதன்பிறகு வீரர்களின் பாதுகாப்பில் ஐசிசி மற்றும் சம்பந்த அணிகளின் கிரிக்கெட் வாரியம் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.