டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது லீக் ஆட்டம் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி, லைகா கோவை கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 



முதல் இன்னிங்ஸ்: 


பேட்டிங்கை தொடங்கிய கோவை அணியின் தொடக்க வீரரான சுரேஷ்குமார் 6 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இருப்பினும் மறுமுனையில் இறங்கிய சுஜய் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தார். சுஜய் 24 பந்துகளில் 27 ரன்களை அடித்து பெவிலியர் திரும்பினார். பின்னர் களமிறங்கிய பாலசுப்பிரமணியன் சச்சின் மற்றும் கோவை அணிகள் கேப்டன் ஷாருக்கான் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சச்சின் 30 ரன்கள் ஆட்டம் இழக்க, அடுத்தடுத்து வந்த வீரர்களான முகிலேஷ் 13 ரன்களுக்கும், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய முகமது ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். பொறுப்புடன் விளையாடிய கோவை அணியில் கேப்டன் ஷாருக்கான் 29 பந்துகளில் அரை சதம் அடித்தார் . இது அவரது பத்தாவது டிஎன்பிஎல் அரைச்சதம் ஆகும். ஷாருக்கான் 32 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து நடராஜன் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். நடராஜன் வீசிய அவரது மூன்றாவது ஓவரில் ஷாருக்கான் கேட்ச் கொடுத்தார். அதனை திருப்பூர் அணி வீரர்கள் தவறவிட்டனர். ஆனால் தனது நான்காவது ஓவரை வீசிய நடராஜன் நான்காவது பந்தில் ஷாருக்கான் விக்கெட்டை எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் லைகா கோவை கிங்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது. திருப்பூர் அணியில் சிறப்பாக பந்து வீசிய நடராஜன் மற்றும் அஜித் ராம் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். முகமது அலி, கருப்புசாமி, விஜய் சங்கர் தலா ஒரு விக்கெட் எடுத்திருந்தனர். 



இரண்டாவது இன்னிங்ஸ்: 


161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணியின் தொடக்க வீரர் ராதாகிருஷ்ணன் முதல் பந்திலையே ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அவருடன் களமிறங்கிய துஷார் ரஹீஜா நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவருடன் விளையாடிய சாத்விக் 12 ரன்கள் அவுட் ஆக, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விஜய் சங்கர், துஷார் உடன் இணைந்து பொறுமையாக விளையாடினர். திருப்பூர் அணியின் கேப்டன் விஜய் சங்கர் 16 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய முகமது அலி 35 ரன்கள் சேர்த்தார். பின்னர் வந்த அனிருத் 4 ரன்களுக்கும், அஜித் ராம் 4 ரன்களுக்கும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதி ஓவரில் 10 ரன் அடித்தால் வெற்றி என்ற நிலையில், அதுவரை பொறுமையாக ஆடிய துஷார் ரஹீஜா 20வது ஓவர் மூன்றாவது பந்தில் 81 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இறுதி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி, ஒரு ரன் எடுத்தால் டிரா என்ற நிலை இருந்தது. ஆட்டத்தின் கடைசி பந்தில் இம்பேக்ட் வீரராக திருப்பூர் அணியில் களம் இறங்கிய கணேஷ் ரன் அவுட் ஆக லைகா கோவை கிங்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லைகா கோவை கிங்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய கேப்டன் ஷாருக்கான் மற்றும் முகமது தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். சித்தார்த் மற்றும் கௌதம் தாமரை கண்ணன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். லைகா கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக்கான் 55 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதன் மூலம் கோவை அணி இந்த சீசனில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.