அக்டோபர் மாதத்திற்கான 'மாத வீரர்' (ஐசிசி மாதத்தின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை) விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது. இதில், ஆண்களுக்கான வீரர்கள் பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தென்னாப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் மற்றும் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா ஆகியோரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று வீரர்களும் 2023 உலகக் கோப்பையில் சிறந்த ஃபார்மில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்த மூன்று வீரர்களில் யார் அக்டோபர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதினை பெறுவார்கள் என்று ஆவல் எழுந்துள்ளது. தென்னாப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் 68.75 சராசரியில் 550 ரன்கள் எடுத்துள்ளார். 2023 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் தற்போது குயின்டன் டி காக் முதலிடத்தில் உள்ளார்.


உலகக் கோப்பையில் மற்ற வீரர்களின் ஆட்டம் எப்படி...?


அதே சமயம் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரன் மூன்றாவது இடத்தில் உள்ளார். ரச்சின் ரவீந்திரா  உலகக் கோப்பை 2023ல் 8 போட்டிகளில் 74.71 சராசரியில் 523 ரன்கள் எடுத்துள்ளார்.


இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உலகக் கோப்பையின் 8 போட்டிகளில் 15.43 சராசரியில் 15 வீரர்களை அவுட் செய்துள்ளார். இதையடுத்து, அக்டோபர் மாதத்திற்கான ஐ.சி.சி விருதை யார் பெறுவார்கள் என்பதை பொறுந்திருந்து பார்க்க வேண்டும். 


வீராங்கனைகளில் யார் பெயர்கள்..? 


 பெண்கள் பிரிவில் இந்த விருதுக்காக இரண்டு ஆல்ரவுண்டர்களும் ஒரு சுழற்பந்து வீச்சாளரும் போட்டியிடுகின்றனர். ஹேலி மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்), அமெலியா கெர் (நியூசிலாந்து), நஹிதா அக்தர் (வங்கதேசம்) ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.


வெஸ்ட் இண்டீஸ் டி20 கேப்டன் மேத்யூஸ் அக்டோபர் மாதத்தில் சரமாரியாக ரன்களை குவித்தார். மேத்யூஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 99, 132 மற்றும் 79 ரன்கள் எடுத்து அசத்தினார். மேலும், இரண்டாவது டி20யில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 36 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. அதன் பிறகு, ஒருநாள் போட்டிகளிலும் 20 மற்றும் 23 ரன்கள் எடுத்தார்.






பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட வங்கதேசத்தின் இளம் வீராங்கனை நஹிதா அக்தர், முதல் முறையாக ‘பிளேயர் ஆஃப் தி மந்த்’ பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டார். 23 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் 5/8 என்ற சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய நஷிதா 8 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகி விருதையும் வென்றார். 


நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் அமெலியா தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அசத்தினார். கடைசி ஒருநாள் போட்டியில் அந்த அணிக்கு எதிராக அபார சதம் அடித்து நியூசிலாந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அதன்பிறகு டி20யிலும் அமெலியா தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்களை துவைத்த இரண்டு போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 70 மற்றும் 61 ரன்கள் எடுத்தார்.