INDW vs SLW AsiaCup 2022 Final: மகளிருக்கான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி 7வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான  மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடர் இம்மாதம் முதல் தேதியில் இருந்து தொடங்கி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் மற்றும்  அரையிறுதிப் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இறுதிப்போட்டி மதியம் 1 மணிக்கு தொடங்கியது.


இந்த இறுதிப் போட்டியில் தாய்லாந்து அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணியும், பாகிஸ்தான் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்று பெரும் உற்சாகத்துடன் இலங்கை அணியும் மோதி கொண்டன. 


இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இலங்கை அணி இந்த முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் எனும் முனைப்பில் களம் இறங்கினாலும், இந்திய வீராங்கனைகளின் பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தொடர்ந்து திணறி வந்தது. எட்டு ரன்களுக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்த இலங்கை அணி, ஒன்பது ரன்களில் தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது. ஒன்பது ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி அதன் பின்னர் மீளவே இல்லை.


தொடர்ந்து இலங்கை அணி விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. முதல் பத்து ஓவர்களில் இலங்கை அணி 26 ரன்கள் மட்டுமே எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. ஒரு கட்டத்தில் இலங்கை அணி 20 ஓவர்கள் தாக்கு பிடிக்குமா?  50 ரன்களையாவது எடுக்குமா? எனும் அளவிற்கு அதன் நிலை மிகவும் மோசமாக இருந்தது.


16 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் மட்டும் எடுத்து இருந்த இலங்கை அணிக்கு, நம்பிக்கை அளிக்கும் வகையில் ஒருவர் கூட விளையாடவில்லை. இலங்கை அணியைப் பொறுத்த வரையில் ஒடாசி ரனசிங்கே(16 ரன்கள்) மற்றும் இனோகாவைத் (14) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை. அதேபோல் யாருமே ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 65 ரன்கள் மட்டுமே எடுத்தது. 


இந்திய அணியைப் பொறுத்த வரையில் ரேணுகாசிங் மூன்று விக்கெட்டுகளும், ரனா மற்றும் ராஜேஸ்வரி கெய்க்வாட் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்திய அணி 66 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறுவது மட்டும் இல்லாமல்  7வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்கும் முனைப்பில் இந்திய மகளிர் அணி களம் இறங்கியது. 


அதிரடியாக விளையாடிய இந்திய மகளிர் அணி 8.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 71 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஏழாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரையில்  ஸ்மிருதி மந்தனா 51 ரன்கள் எடுத்துள்ளார்.