உலகக்கோப்பை தொடருக்காக பிசிசிஐ தேர்வு செய்யும் இந்திய அணியில், 15 பேர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


உலகக்கோப்பை தொடர்:


உலகக்கோப்பை ஒருநாள் தொடர் வரும் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் தொடரை நடத்தும் இந்தியாவோடு,  பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா நியூசிலாந்து, இங்கிலாந்து என 10 அணிகள் பங்கேற்க உள்ளன. தொடரில் 45 லீக் போட்டிகள் உட்பட மொத்தம் 48 போட்டிகள் சென்னை, மும்பை உள்ளிட்ட 10 நகரங்களில் நடைபெற உள்ளன. போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன.


தயாராகும் அணிகள்:


உலகக்கோப்பை தொடர் தொடங்க சரியான இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ள சூழலில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள், தங்களது உத்தேச வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருந்த பென் ஸ்டோக்ஸ், உலகக்கோப்பை தொடருக்காக மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். காயத்தில் இருந்து மீண்ட வில்லியம்சன் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியில் இடம்பெறுவார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதோடு, இந்த அணிகள் சர்வதேச போட்டிகளில் விளையாடி உலகக்கோப்பை தொடருக்காக தங்களை தயார்படுத்தி வருகின்றன.


இந்திய அணி இன்று அறிவிப்பு:


அதேநேரம், தொடரை நடத்தும் இந்திய அணி வீரர்கள் தொடர்பான எந்தவித தகவலும் வெளியாகமல் இருந்தது. இந்நிலையில், அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கடந்த சனிக்கிழமை இலங்கை சென்றார். ஆசியக்கோப்பை தொடரில் விளையாடி வரும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, இன்று உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது. பிற்பகல் 1.30 மணியளவில் இந்த அறிவிப்பு வெளியாகும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க: Sunil Gavaskar: 'அரசியலால் அழிகிறது இந்திய கிரிக்கெட் அணி’.. பகிரங்கமாக கருத்தை தெரிவித்தாரா கவாஸ்கர்? உண்மை என்ன?


உத்தேச அணி:


ரோகித் சர்மா தலைமையிலான உத்தேச அணியில் ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் , ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அக்சர் படேல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு?


காயத்திலிருந்து கே.எல். ராகுல் தற்போது தான் மீண்டு வந்துள்ளார். முழு உடற்தகுதி பெறாவிட்டாலும் அவர் ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இணைக்கப்பட்டார். போதிய பயிற்சி இல்லாமல் உலகக்கோப்பை தொடரில் ராகுல் நேரடியாக விளையாடுவது, இந்திய அணிக்கே பின்னடைவாக இருக்குமென பல்வேறு தரப்பினரும் கருதுகின்றனர். சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.  இருப்பினும் கே.எல். ராகுலின் முந்தைய சாதனைகள் மற்றும் அனுபவத்தை கருத்தில் கொண்டு, பிசிசிஐ அவரை உலகக்கோப்பை தொடரில் இணைக்க முடிவு செய்துள்ளதாக கூறபப்டுகிறது.