19 வது முறை தொடரை வென்ற இந்தியா:


இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குவாலியரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல் இன்றைய போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. அந்தவகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி தொடரை வெல்வது இது 19வது முறை.


அதிரடி ஆட்டம் ஆடிய இந்திய அணி:


முன்னதாக,இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில் சஞ்சு சாம்சன் 10 ரன்னுக்கும், 3 பவுண்டரியை துரத்திய அபிஷேக் சர்மா15 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் 8 ரன்னுக்கு அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதன் பின்னர் 4வது விக்கெட்டிற்கு நிதிஷ் ரெட்டி - ரிங்கு சிங் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.






இருவரும் இணைந்து வங்கதேச பந்து வீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் 34 பந்துகளில் 7 சிக்ஸர், 4 பவுண்டரி என 74 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து 5 பவுண்டரி 3 சிக்ஸர்கள் விளாசிய ரிங்கு சிங் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.இதன் பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டிய 32 ரன்களும், ரியான் பராக் 15 ரன்களும் விளாச இந்திய அணி 200 ரன்களை கடந்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 221 ரன்களை குவித்தது. வங்கதேச அணி தரப்பில் அகமத், ஷகிப் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.



இதனை தொடர்ந்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது வங்கதேச அணி. ஆனால் அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். அதிகபட்சமாக வங்கதேச அணி வீரர் மஹமதுல்லா 39 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உட்பட 41 ரன் எடுத்தார்.


அதன்படி 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை நிதிஷ் குமார் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.