அயர்லாந்து எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 435 ரன்களை குவித்து, மகளிர் ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது அணி என்ற பெருமையைப் பெற்றது.
சாதனை முறியடிப்பு:
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்குப் பிறகு ஒரு இன்னிங்ஸில் மொத்தம் 400 ரன்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது. ஸ்மிருதி மந்தனா மற்றும் இளம் தொடக்க ஆட்டக்காரர் பிரத்திகா ராவல் ஆகியோர் சதம் அடித்தனர், அயர்லாந்திற்கு எதிராக இந்தியா சாதனை படைத்தது. இந்தியா 435 ரன்களை அடித்து, மூன்று நாட்களுக்கு முன்பு இதே அணிக்கு எதிராக 370 ரன்களின் முந்தைய சாதனையை முறியடித்தது.
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் அடித்த 435 ரன்கள் நான்காவது அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. நியூசிலாந்து அணி 2018 ஆம் ஆண்டு டப்ளினில் அயர்லாந்துக்கு எதிராக 4 விக்கெட்டுக்கு 491 ரன்கள் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த சாதனையாக உள்ளது.
இந்திய ஆண்கள் அணி 2011 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 418 ரன்கள் குவித்திருந்தது, அந்த சாதனையை தற்போது இந்திய மகளிர் அணி முறியடித்துள்ளது.
பிரத்திகா ராவல் சதம்:
இந்தியாவுக்காக தனது இரண்டாவது தொடரில் விளையாடிய பிரத்திகா ராவல் தனது முதல் சதத்தை அடித்தார். டெல்லியைச் சேர்ந்த 24 வயதான ராவல், 129 பந்துகளில் 154 ரன்களை அடித்தார். இந்த சதத்தில் பிரத்திகா 20 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரை விளாசினார்.
ஹர்மன்பிரீத் கவுர் இல்லாத நிலையில் கேப்டனாக இருக்கும் ஸ்மிருதி மந்தனா, 70 பந்துகளில் 100 ரன்களை விளாசினார் . பெண்கள் ஒருநாள் போட்டிகளில் இந்திய வீராங்கனையின் அதிவேக சதம் இதுவாகும். அவர் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களை அடித்து நிலையில் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
இந்திய இன்னிங்ஸின் சிறப்பம்சமாக ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்தனர், இது மகளிர் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் மூன்றாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும்.