வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில், நடுவர்களின் மோசமான தீர்ப்பை, இந்திய அணி வீராங்கனைகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். குறிப்பாக, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மைதானத்திலேயே பேட்டால் ஸ்டம்பை அடித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


வங்கதேச பயணம்:


இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக வங்கதேசம் சென்றது. அதில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. தொடரை கைப்பற்றுவது யார் என்பதை உறுதி செய்யும் மூன்றாவது ஒருநாள் போட்டி மிர்பூரில் நடைபெற்றது.


சமனில் முடிந்த தொடர்:


டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்களை சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஷபாலி வர்மா மற்றும் ஹர்லீன் தியோல்  ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், 49.3 ஓவர்களில் 225 ரன்களுக்கு இந்திய அணி 10 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் போட்டி சமனில் முடிந்த நிலையில், போட்டிக்கான நேரம் முடிந்துவிட்டதால் சூப்பர் ஓவர் முறை பின்பற்ற முடியாது என நடுவர்கள் அறிவித்தனர். இதனால், 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது.


ஹர்மன்பிரீத் அவுட்:


இந்த போட்டியில் 14 ரன்கள் எடுத்து இருந்தபோது ஆட்டமிழந்த ஹர்மன்பிரீத் கவுர் செய்த செயல்தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவில், 34வது ஓவரின் 4வது பந்தில் ஹர்மன்பிரீத் கவுர் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்றபோது பந்து பேட்டில் படாமல் காற்றில் பறக்க, அதனை வங்கதேசத்தின் நஹிதா அக்தர் பிடித்து விக்கெட் கோரினார். நடுவரும் உடனடியாக அவுட் கொடுத்துவிட்டார்.









ஸ்டம்ப்பை பேட்டால் அடித்த ஹர்மன்:


ஆனால், பந்து கையிலோ, பேட்டிலோ படவில்லை பின்பு எப்படி அவுட் கொடுத்தீர்கள் எனும் விதமாக ஆவேசமடைந்த ஹர்மன் பிரீத், தனது பேட்டால் ஸ்டம்பை அடித்தார். அதோடு, பெவிலியன் நோக்கிச் செல்லும்போது நடுவரையும் வசை பாடினார். தனது விக்கெட்டை கொண்டாடிய வங்கதேச ரசிகர்களை நோக்கி, கையை தூக்கி தம்ஸ்-அப் சிம்பல் காட்டினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


விடாத கோபம்:


போட்டி முடிந்த பிறகு பேசிய ஹர்மன் பிரீத் “'நாங்கள் இந்த ஆட்டத்தில் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம். இந்த போட்டியில் நடுவர்கள் அளித்த சில முடிவுகள் எங்களுக்கு மிகவும் ஆச்சரியம் அளித்தது. அடுத்த முறை நாங்கள் வங்காளதேசத்துக்கு வரும் போது, இதுபோன்ற நடுவர்களின் முடிவையும் சமாளிக்கும் வகையில் தயாராவோம்.  நடுவர்களின் சில மோசமான முடிவுகள் எங்களுக்கு ஏமாற்றம் அளித்தது” என கோபமாக பேசினார்.


நடுநிலையான நடுவர்கள் இந்த தொடரில் பயன்படுத்தவில்லை. மாறாக, வங்கதேசத்தைச் சேர்ந்த நடுவர்கள்தான் இந்த போட்டியில் பங்கேற்றனர். இதனால், அவர்கள் தங்கள் நாட்டிற்கு சாதகமாக செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதேநேரம், ஐசிசி விதிகளை மீறி ஹர்மன் பிரீத் கவுர் நடந்துகொண்டதால், அவருக்கு அபராதத்துடன் சில போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.