இந்தியா ஜிம்பாப்வே இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.


டாஸில் வென்ற இந்திய அணி:


மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஜிம்பாப்வே-இந்தியா இடையிலான முதலாவது கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. டாஸில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இன்னசன் கையா, தடிவனசே மருமனி ஆகியோர் களமிறங்கினர். ஆனால், 4 மற்றும் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இருவரும் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர். 3வது மற்றும் 4வது விக்கெட்டுகளுக்கு களமிறங்கிய வெஸ்லி மற்றும் சேன் வில்லியம்ஸ் ஆகியோர் 5 மற்றும் 1 ரன்கள் எடுத்து வெளியேறினர்.


விக்கெட்டுகள் சீட்டுகட்டுகள் போல சரிய, ஜிம்பாப்வேயின் கேப்டன் ரெகிஸ் சகப்வா 35 ரன்கள் விளாசினார்.  ப்ராட் ஈவன்ஸ் மற்றும் ரிச்சர்ட் நரவா இணை சிறப்பாக விளையாடி, அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 3 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உள்பட 34 ரன்கள் எடுத்து ரிச்சர்ட் நரவா ஆட்டமிழக்க, அடுத்து வந்த விக்டர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்களை எடுத்தது ஜிம்பாப்வே அணி. ப்ராட் ஈவன்ஸ் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடித்து 33 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.


இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அக்ஸர் படேல் 7.3 ஓவர்கள் பந்துவீசி 24 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை  வீழ்த்தினார். ப்ரஷீத் கிருஷ்ணா மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினார்.


190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். ஷிகர் தவான் ஒரு முனையில் பொறுமையாக விளையாட, சுப்மன் கில் மறுமுனையில் அதிரடி காட்டினார். 30வது ஓவரின் 5வது பந்தில் ஷிகர் தவான் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய இருவரும் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதனால் 30.5 ஓவர்களில் 192 ரன்களை விளாசிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 113 பந்துகளில் 9 பவுண்டரிகள் உள்பட 81 ரன்களை சிகர் தவானும், 72 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் உள்பட 82 ரன்களை எடுத்து சுப்மன் கில்லும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.




ஜிம்பாப்வே அணியைப் பொறுத்தவரை ரிச்சர்ட் 7 ஓவர்கள் பந்துவீசி 40 ரன்களை விட்டுக்கொடுத்தார். தொடரின் முதல் போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


ஜிம்பாப்வே அணியை இந்திய அணி வென்றதன் மூலம் அந்த அணியை இந்திய அணி தொடர்ச்சியாக 13 போட்டிகளில் வீழ்த்தியுள்ளது. இரண்டு அணிகளும் இதுவரை 64 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில் இந்திய அணி 52 போட்டிகளில் வெற்றியும், 10 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.




கடைசியாக இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மோதின. இந்த போட்டியிலும் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது