கொல்கத்தாவில் நடைபெற்ற  முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


ஈடன்கார்டன் மைதனாத்தில் நடைபெற்ற  இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே இந்திய அணி விக்கெட் எடுத்தது. ப்ரெண்டன் கிங் விக்கெட்டை புவனேஷ்வர் குமார் வீழ்த்தினார். அதன்பின்னர், வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது விக்கெட்டை இழந்தது. அதிரடியாக ஆடி வந்த கைல் மேயர்ஸ் (31 ரன்கள்) விக்கெட்டை சாஹல் எடுத்தார். அறிமுக டி20 போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் ரவி பிஷ்னோய். சேஸ் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதே ஓவரில் தனது இரண்டாவது விக்கெட்டையும் அவர் எடுத்தார்.  அப்போது, 11 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்தது அந்த அணி. ரன்களை வாரிக்கொடுத்த வந்த தீபக் சாஹர் இந்தப் போட்டியில் தனது முதல் விக்கெட்டை எடுத்தார். ஷூசைனை காட்டன் போல்ட் முறையில் சாய்த்தார்.


பூரான், மேயர்ஸ் அதிரடியால் தொடக்கத்தில் வேகமாக் ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ், அதன்பின்னர், 16 ஓவரில் தான் 100 ரன்கள். அப்போது, 108/5 ரன்கள் எடுத்து தடுமாறி வந்தது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்து, ரன்கள் குறைந்த நிலையில், மறுபக்கம் பூரான் மட்டும் நிலையாக நின்று ஆடி அரைசதம் அடித்தார். அவரும், கேப்டன் பொல்லார்டும் பின்னர் அணியின் ஸ்கோரை கொஞ்ச கொஞ்சமாக ஏற்றி வந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் 6ஆவது விக்கெட்டை  ஹர்ஷல் பட்டேல் வீழ்த்தினார். அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் பூரானின் விக்கெட்டை சாய்த்தார். அப்போதும் வெஸ்ட் இண்டீஸ் 18 ஓவர்கள் முடிவில் 135/6 எடுத்தது.


இறுதியாக 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து, இந்திய அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக பூரான் 61, கைல் மேயர்ஸ் 31, பொல்லார்ட் 24 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஹர்ஷல் பட்டேல், ரவி பிஷ்னோய் தலா இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தனர்.


இதனைத்தொடர்ந்து, இந்திய அணி களமிறங்கியது. தொடங்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினார்கள். ரோகித் சர்மா தொடக்கம் முதலே அதிரடி காட்டினார்.


இந்திய கிரிக்கெட் அணி 6 ஓவர்களில் 50 ரன்களை எடுத்தது.  10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய ரோகித் 19 பந்தில் 40 ரன்கள் ஆட்டமிழந்தார்.


100 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. ரோகித்தின் விக்கெட்டை எடுத்த சேஸ் தான் இஷானின் விக்கெட்டையும் தூக்கினார். அப்போது அணியின் ஸ்கோர் 93-2 (12 ஓவர்கள்). கிஷானை தொடர்ந்து கோலியும்..17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பின்னர், ரிஷப் பண்ட் அவுட் ஆனதால், 4ஆவது விக்கெட்டை இழந்து  இந்திய அணி திணறியது.




15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்த நிலையில், சூர்யாகுமார் யாதவும், வெங்கடேஷ் அய்யரும் முதலில் பொறுமையுடன் பாலுக்கு பால் ரன்கள் எடுத்து வந்தனர். காட்ரெல் வீசிய 17 ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை சூர்ய குமார் பறக்க விட, இந்திய அணியின் பக்கம் ஆட்டம் திரும்பியது. பின்னர், இருவரும் அதிரடி காட்ட இறுதியாக 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடித்து  வெற்றி இலக்கை 18.5 ஓவர்களில் அடைந்தது. வெற்றி இலக்கை சிக்ஸர் அடித்து முடித்து வைத்தார் வெங்கடேஷ் அய்யர். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் தொடரில் 1 -0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.


அதிகபட்சமாக ரோகித் 40, இஷான் கிஷன் 35, சூர்ய குமார் யாதவ் 34 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சேஸ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


அறிமுக போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ரவி பிஷ்னோய் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.