இந்தியா-இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. அதில் முதல் போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. 


இந்தநிலையில், இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசான்கா மற்றும் குனதிலங்கா களமிறங்கினர். சிராஜ் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் குணதிலகா ரன் எதுவும் எடுக்காமல் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அதனைதொடர்ந்து அடுத்த ஓவரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ்கான் வீசிய இரண்டாவது ஓவர் கடைசி பந்தில் நிசான்கா 1 ரன்கள் எடுத்து வெங்கடேஷ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 


4 ரன்கள் எடுத்திருந்த அசலங்கா ஆவேஷ்கான் வீசிய 4 ஓவரில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, ஒரு கட்டத்தில் இலங்கை அணி 6 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 18 ரன்களுடன் தடுமாறியது. தொடர்ந்து அடுத்தடுத்து 2 விக்கெட்கள் விழ, இலங்கை அணி 100 ரன்களை கடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. 


இந்தநிலையில், இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனகா களமிறங்கி இந்திய அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர், 38 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 146 ரன்கள் அடித்தது. 






147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித்சர்மா மற்றும் சம்சு சாம்சன் களமிறங்கினர். பெளண்டரியுடன் கணக்கை தொடங்கிய ரோஹித், அடுத்த ஓவரிலேயே 5 ரன்களில் கருணாரத்னேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின்னர் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அவருக்கு பக்கபலமாக சஞ்சு சாம்சன் ஒருபக்கம் அதிரடி காட்டினார். 


சஞ்சு சாம்சன் 12 பந்துகளில் 18 ரன்கள் அடித்து கருணாரத்னே வீசிய 7 வது ஓவரில் தினேஷ் சண்டிமாலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின்பு களமிறங்கிய தீபக் ஹூடா ஒருபக்கம் அதிரடிக்காட்ட, மறுபக்கம் ஷ்ரேயாஸ் இலங்கை அணி பந்துவீச்சாளர்களின் பந்தை தெறிக்கவிட்டார். 


ஷ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து சிறப்பாக விளையாடிவந்த தீபக் ஹூடா 16 பந்துகளில் 21 ரன்கள் அடித்து லகிரு குமாரா வீசிய 11 ஓவரில் க்ளீன் போல்டானார். தொடர்ந்து, ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்த ஷ்ரேயாஸ் ஐயர் இந்த தொடரில் தொடர்ந்து 3வது அரைசதத்தை பதிவு செய்தார். 


வெங்கடேஷ் ஐயரும் வந்த வேகத்தில் 5 ரன்களில் வெளியேற, ஜடேஜா வந்து ரன் எண்ணிக்கை தொடங்கினார். இருவரும் கடைசி வரை நிதானமாக விளையாடி 19 பந்துகள் மீதம் இருக்க இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தனர்.