இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் ஆட உள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோத உள்ளனர்.

Continues below advertisement

நாளை டெஸ்ட் போட்டி:  

இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை இலங்கையின் காலே மைதானத்தில் தொடங்குகிறது. இந்திய அணி இலங்கை கிரிக்கெட் லெவனுடன் நடந்த பயிற்சி போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது. அந்த தன்னம்பிக்கையுடன் இந்திய அணி களமிறங்குகிறது. சீதோஷ்ண நிலை, மைதானத்தின் தன்மை இரண்டும் இந்தியாவைப் போலவே இருக்கும் என்பதால் இந்திய வீரர்களுக்கு அது மிகப்பெரிய சவாலாக இருக்காது. 

பேட்டிங் பலம்:

இந்திய அணிக்கு பேட்டிங் பலமாக உள்ளது. ஜெய்ஸ்வால், கேஎல்ராகுல், கேப்டன் சுப்மன் கில், படிக்கல், ரிஷப்பண்ட், ஜடேஜா, சர்ப்ராஸ் கான் ஆகியோர் உள்ளனர். இதில் ப்ளேயிங் லெவனில் சர்ப்ராஸ் கான் தவிர எஞ்சியவர்கள் ஆடுவார்கள் என்று கருதப்படுகிறது. பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் இந்த போட்டியில் சிறப்பாக ஆடினால் அவர் மிகப்பெரிய அளவில் இந்திய அணியின் எதிர்காலமாக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

Continues below advertisement

ஜெய்ஸ்வால் தடுமாறி வரும் சூழலில், பயிற்சி போட்டியில் சிறப்பாக ஆடினார். அவர் தனது ஃபார்முக்கு திரும்பிவிட்டால் இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும். கேஎல் ராகுல் மற்றும் ரிஷப்பண்ட்டின் அனுபவம் இந்திய அணிக்கு மிகவும் அவசியமாக உள்ளது. 

சொந்த மண்ணில் இலங்கை:

சொந்த மண்ணில் ஆடும் இலங்கை அணியும் பலமாகவே உள்ளது. அவர்களுக்கு இந்திய வீரர்கள் அளவிற்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அனுபவம் இல்லாவிட்டாலும் அவர்கள் சொந்த மண்ணில் ஏராளமான போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அந்த அணியின் கேப்டன் டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா, மதுஷ்கா, சண்டிமால், மென்டிஸ், பசிந்து சூர்யபண்டாரா ஆகியோர் பேட்டிங் பலமாக உள்ளனர். இவர்களில் சண்டிமால் அந்த அணியின் அனுபவமிகுந்த சீனியராக உள்ளார். 

பந்துவீச்சு:

பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் இந்திய அணிக்கு சிராஜ் பெரிய பலமாக உள்ளார். அவருடன்  பிரசித் கிருஷ்ணா களமிறங்குவார் என்று எதிர்பார்க்கலாம். இளம் வீரர் குர்னூர் ப்ராரும் இந்த போட்டியில் ஆடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அனுபவ பந்துவீச்சாளர் ஜடேஜா தனது ஆல்ரவுண்டர் பணியை சிறப்பாக செய்தால் இந்திய அணிக்கு பெரிய பலமாக அமையும். வளர்ந்து வரும் சுழற்பந்துவீச்சாளர் மானவ் சுதரும் ஆடுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இலங்கையிலும் பந்துவீச்சில் லஹிரு குமாரா, மதுஷங்கா, பிரபாத் ஜெயசூர்யா,  தினுஷா என பலர் உள்ளனர். மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப 2 அல்லது 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் இந்திய மற்றும் இலங்கை அணி களமிறங்கும் என்று கருதப்படுகிறது. சுப்மன்கில் தலைமையில் இந்திய எதிர்கால அணியை கட்டமைக்க பிசிசிஐ முயற்சித்து வரும் சூழலில், இந்த தொடர் இந்திய அணி வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.