IND vs SA, T20 World Cup 2024 Astrology Predictions: சர்வதேச கிரிக்கெட் உலகின்  பெருமை மிகு 20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 20 கோடி ரூபாய் ரொக்கப்பரிசினை வெல்லப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில், இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் மோதுகின்றன.



முன்னாள் சாம்பியன் இந்தியாவும், முதல்முறையாக இறுதிப்போட்டி ஒன்றிற்குள் நுழைந்திருக்கும் தென் ஆப்பிரிக்காவும், கோப்பையை வெல்வதற்கு கடுமையாகப் போராடும் என்பதால், இறுதிப் போட்டியின் ஒவ்வொரு நிமிடமும் கிரிக்கெட் பார்வையாளர்களுக்கு சிறந்த த்ரில் அனுபவத்தைத் தரும் என்று எதிர்பார்க்கலாம்.  


இந்த 20 ஓவர் உலகக் கோப்பையை பொறுத்தமட்டில்,  இந்தியாவின் பயணம் வெற்றிப் பாதையில்தான் இருந்திருக்கிறது. எந்தவொரு ஆட்டத்திலும் தோல்வியின் விளிம்பு வரை கூட செல்லவில்லை. அனைத்திலும் சொல்லிக்கொள்ளக்கூடிய அளவில் வெற்றியைப் பெற்றிருக்கிறது. குறைந்த எண்ணிக்கை எடுத்தாலும், பாகிஸ்தானைத் தோற்கடித்தது போல், எதிரணியை எளிதாகத் தோற்கடித்து, வெற்றிப்பயணத்தில் இறுதியை அடைந்திருக்கிறது. 


மறுபக்கத்தில், தென்னாப்பிரிக்கா அணியும் எந்த ஆட்டத்திலும் தோல்வி அடையவில்லை என்றாலும் சில ஆட்டங்களில் தோல்வியின் விளிம்பு வரை சென்று குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, வெற்றிப் பெற்றதை மறுக்க முடியாது. அதேபோல், உலகக் கோப்பை போட்டியொன்றில், முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்திருப்பதால், அந்த அணிக்குக் கூடுதல் அழுத்தம் இருக்கும் என அந்த நாட்டின் முன்னாள் வீரர்களும் பலரும் கூறியுள்ளனர்.  அதேபோல், இந்தியாவும் கடந்த பல ஆண்டுகளாக, இறுதிப்போட்டிக்குச் சென்று தொடர்ந்து தோல்வி அடைந்ததால், இம்முறை வென்றே தீர வேண்டும் என்ற வேகத்தில் இருக்கிறது.


ஆனால், அதுவே இந்திய அணிக்கு அழுத்தத்தை அதிகப்படுத்தி இருக்கும் என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளதோடு, இந்திய அணியின் அனுபவமும் திறமையான வீரர்களும் இந்தியாவக்கு இரண்டாவது 20 ஓவர் உலகக் கோப்பையை வெல்வார்கள் என நம்பிக்கையும் தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்குமே பெரும் அழுத்தம் இருப்பதால், நெருக்கடி சமமாகவே காணப்படுகிறது. ஆனால், 20 ஓவர் போட்டி என்பது, அன்றைய தினத்தில் யார் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்பதுதான் வெற்றியை முடிவு செய்யும் என்பதால், இன்று கதாநாயகன் ஆகப் போவது யார் என்பது போட்டியில்தான் தெரிய வரும். 


இறுதிப்போட்டி நடைபெறும் பார்படோஸில் தீவில் உள்ள பிரிட்ஜ்டவுன் நகரின் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இருந்து வரும் நேரடித் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, சுழல்பந்துவீச்சுக்கு இந்த மைதானம் மிகவும் ஏற்றது என வரலாறு கூறுகிறது. இந்திய தரப்பில், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா என 3 சாம்பியன் சுழல்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இந்த மைதானத்தில் பந்து பெரிய அளவு பவுன்ஸ் ஆகாது என்பதும், இந்திய அணிக்குச் சாதகமாக காணப்படுகிறது. ஏனெனில், பந்து பவுன்ஸ் ஆகும் போது, தென்னாப்பிரிக்க வீரர்கள் மிகச் சிறப்பாக ஆடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததது, ஆனால், இந்த மைதானத்தில் பவுன்ஸ் பெரிய அளவு இருக்காது என்பது, கிட்டத்தட்ட நம்மவூர் மைதானத்தில் விளையாடுவது போன்ற அனுபவத்தைத் தரும் என்பது இந்தியாவுக்குக் கூடுதல் சாதகம்.  


இந்த மைதானத்தில், இதுவரை நடந்த போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த அணிதான், 62 சதவீதம் வெற்றிப் பெற்று இருக்கிறது எனச் சொல்கிறது வரலாறு. எனவே, டாஸ் வெல்பவர்கள் பெரும்பாலும், பேட்டிங்கைதான் தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்த மைதானத்தில், இந்த உலகக்கோப்பையில் லீக் அல்லது சூப்பர் 8 என இதுவரை தென்னாப்பிரிக்கா விளையாடவில்லை. ஆனால், இந்தியா விளையாடி, ஆப்கானிஸ்தானை எளிதாக வென்று இருப்பதும் இந்தியாவுக்கு, மைதானம் குறித்த அனுபவத்தைத் தருவதும் சாதகமாக இருக்கிறது. 







ஜோதிடர்களின் பார்வையில் யாருக்கு வெற்றி?


ஏபிபி நாடு பயனர்களுக்குப் பரிச்சயமான பிரபல ஜோதிடர், ஜோதிட ரத்னா சிம்மம் ஷாமின்  கணிப்பு: 
இந்தியா vs  தென்னாப்பிரிக்கா  அணிகள் இன்று இரவு  இறுதிப் போட்டியில் மோதுகின்றன.  பொதுவாக ஒரு விளையாட்டில் வெற்றி தோல்வியை  ஜோதிட ரீதியாக  நிர்ணயம் செய்வதற்கு அந்த அணியின் தலைவர்களை தேர்வு செய்து அவர்களின் சொந்த ஜாதகங்களை ஆராய்ந்தால் நிச்சயமாக அன்றைய தினத்தில் யார் உச்சம் பெறுகிறார்களோ அந்த ஜாதகர் உடைய அணி தான் வெற்றி பெறும் என்பதை கணிப்பார்கள்.  அதையும் தாண்டி மற்ற விளையாட்டு வீரர்களின் ஜாதகங்களும்  சேர்ந்தே கணிக்கப்படும்.  


முதலில் நாம் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மாவின் ஜாதகத்தை அலசுவோம்…ரோகித் சர்மாவின் ஜாதகம் என்ன சொல்கிறது ?


சூரியன் உச்சம் பெற்று மேஷ ராசியிலும், சந்திரன் உச்சம் பெற்று ரிஷப ராசியிலும் அமர்ந்திருக்க கூடிய ஜாதகம் தான் ரோஹித் சர்மாவின் ஜாதகம்.  தற்போது குரு ராசியிலேயே அமர்ந்து செவ்வாயின்  வீட்டிலேயே அமர்ந்திருக்க கூடிய இந்த சூழ்நிலையில், நிச்சயமாக ரோகித் சர்மாவுக்கு சாதகமாகத்தான் இந்த  உலகக்கோப்பை இறுதிப் போட்டி இருக்கப் போகிறது என்பதை ஓரளவுக்கு நம்மால் கணிக்க முடியும். வானத்தின் சந்திரனின் நிகழ்வை வைத்து கோல்ஸாரங்களின் கிரக  நிலைகளை ஆராய்ந்து பார்த்தால்  கோள் சாரத்தில் வரும் சந்திரன் மீன ராசியில் தற்போது இருக்கிறது அது அடுத்ததாக தொடப்போவது எட்டு டிகிரியில் இருக்கக்கூடிய புதனையும்  சூரியனையும் தான் என்பதை வைத்து  இந்த முறை உலகக் கோப்பை ரோகித் சர்மாவுக்கு  கிடைக்கலாம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிறது. 


தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் ஜாதகம் என்ன சொல்கிறது ?


சந்திர அடிப்படையில் கணிக்கும்போது, கன்னி ராசியைச் சேர்ந்த மார்க்ரம், நீச்ச பங்கம் என்ற விதியின் அடிப்படையில் அவருக்கு ஓரளவுக்கு நன்மையே செய்யும்.  ஆனால் கோல் சாரத்தின் அடிப்படையில் சந்திரன் அடுத்ததாக ஈடனின் ஜாதகத்தில் இருக்கக்கூடிய பிறப்பு கேதுவை சந்திப்பதால் அவருக்கு அவ்வளவாக வெற்றி வாய்ப்புகள் இருக்காது என்பதை நம்மால் கூற முடியும்.  மார்க்ரம் ஜாதகத்தில் சனி கும்ப ராசியில் அமர்ந்து  நிச்சயமாக அவருக்கும் பலத்தை கொடுத்தாலும் துலாம் ராசியில் புதன் சுக்கிரன் குரு போன்ற ராஜகிரங்கங்கள் அமர்ந்திருக்கிறது இந்த கிரக சூழ்நிலையில் நிச்சயமாக மார்க்ரம்மும்  ஒரு சில வெற்றி வாய்ப்புகளுக்கு தகுதியானவர் என்றாலும் இவரை விட ரோகித் சர்மாவின் ஜாதகம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது என்பதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருக்கிறது.என்னுடைய கணிப்புப்படி இறுதியில்  இந்திய அணி வெற்றி பெறும்  என்பதற்கான பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது!!!


சென்னையைச் சேர்ந்த ஜோதிடர் மணிசேகரன் ஏபிபி நாடு-விடம் பேசும் போது, இன்றைய போட்டியில் இந்தியா நிச்சயம் வெல்லும் என உறுதிப்படத் தெரிவித்துள்ளார். ரோகித் சர்மாவின் ரிஷப ராசி, இன்று மிகச் சிறப்பான நிலையில் இருக்கிறது. வெற்றியை அவருக்கு நிச்சயம் பரிசாக்கும். அதற்கேற்ப, சனியும் புதனும் அவருக்குப் பக்கபலமாக இருப்பதால், வெற்றி நிச்சயம் என இருக்கிறது ரோகித் சர்மாவின் ஜாதகம். மறுபக்கத்தில், தென்னாப்பிரிக்க கேப்டன் மார்க்ரம்மின் ராசியாக இருப்பது கன்னி. இன்றைய ராசிப்பலன் போராட வேண்டி இருக்கும். சில முடிவுகள் பெரும் விபரீதத்தைத் தரும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனச் சொல்கிறது.  ஆகவே, இரண்டு கேப்டன்களின் ராசிகளை வைத்துப் பார்க்கும்போது, இன்று ரோகித் சர்மாவுக்கே வெற்றி எனக் கூறுகிறார் ஜோதிடர் மணிசேகரன். 


பிரபல ஜோதிடர்,  நங்கநல்லூர் வினோத் சர்மாவின் கணிப்புப் படி, இன்றைய போட்டியில், இந்தியா வெல்வதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறதாம். அதேபோல், ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோரின் தனிப்பட்ட ஜாதகத்தின் இன்றைய ஜோதிட பலன்கள் அடிப்படையில், இன்று மிகச் சிறந்த ஆட்டத்தை ஏதேனும் ஒரு வகையில் அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என நம்மிடம் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியினர் கடும் போட்டியைத் தருவார்கள் என்றாலும், இந்தியாவுக்கே இறுதி வெற்றி என அடித்துக் கூறுகிறார் நங்கநல்லூர் வினோத் சர்மா. 


ஜோதிட கணிப்புகள் எல்லாம் இந்தியாவே வெற்றிப்பெறும் எனக் கூறுவது, இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், இன்றைய இறுதி ஆட்டத்தில் சிறப்பாக எந்த அணி விளையாடுகிறதோ அவர்களுக்கே வெற்றி என்பது மட்டும்தான் உறுதி. எனவே, யார் வெற்றிப் பெற்றாலும், உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் ஒரு சிறந்த கிரிக்கெட் போட்டியாக இருக்க வேண்டும் என்பதே, கிரிக்கெட் ரசிகர்களின் ஆசையாக இருக்கும் என நம்புகிறேன்.