IND vs SA Test 2025: இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தியா Vs தென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடர்:
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய அணி சொந்த ஊர் திரும்பியுள்ளது. இதையடுத்து, உள்ளூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. கேப்டன் கில் தலைமையில் சொந்த ஊரில் இந்திய அணி களமிறங்க உள்ள இரண்டாவது டெஸ்ட் தொடர் இதுவாகும். இந்த போட்டியில் இந்திய அணி சாதிக்குமா? இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் ஆதிக்கம் செலுத்துவது யார்? கடந்த கால வரலாறு என்ன? என்பது குறித்த விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
தென்னாப்ரிக்கா சுற்றுப்பயணம்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்கா அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. நவம்பர் 14ம் தேதி கொல்கத்தாவிலும், நவம்பர் 26ம் தேதி பரஸ்பராவிலும் டெஸ்ட் போட்டிகள் தொடங்க உள்ளன. இதையொட்டி நடைபெற்ற இரண்டு பயிற்சி ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன.
இந்தியா Vs தென்னாப்ரிக்கா டெஸ்ட்: நேருக்கு நேர்
இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, தென்னாப்பிரிக்கா 18 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. கடைசியாக தென்னாப்பிரிக்க இந்திய மண்ணில் கடந்த 2019-20 டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. மூன்று போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில், இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தி, 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையே கடைசியாக நடந்த டெஸ்ட் தொடர், டிசம்பர் 2023 முதல் ஜனவரி 2024 வரை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. அது 1-1 என டிராவில் முடிந்தது. செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க்கில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா ஆதிக்கம் செலுத்தி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப் டவுனின் நியூலேண்ட்ஸில் நடந்த இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்டில் இந்தியா, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
சுதந்திரக் கோப்பை வரலாறு
இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான டெஸ்ட் தொடர் 2015 முதல் சுதந்திரக் கோப்பை என்று அழைக்கப்படுகிறது. அகிம்சை வழிமுறைகள் மூலம் இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் சுதந்திரத்தை அடைவதில் மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலாவின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த தொடருக்கு சுதந்திர கோப்பை தொடர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தொடரின் சாதனைகள்:
தென்னாப்ரிக்காவுக்கு எதிராக அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த சாதனையை சச்சின் டெண்டுல்கர் வைத்திருக்கிறார். 25 போட்டிகள் மற்றும் 45 இன்னிங்ஸ்களில், அவர் 42.46 சராசரியாக 47.72 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1,741 ரன்கள் எடுத்துள்ளார். டெண்டுல்கர் 7 சதங்கள் மற்றும் 5 அரை சதங்களை அடித்துள்ளார். மூன்று முறை மட்டுமே டக்-அவுட் ஆனார். அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் தென்னாப்ரிக்காவின் ககிசோ ரபாடா முதலிடம் வகிக்கிறார். அதன்படி, 14 டெஸ்ட் போட்டிகளில் 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளர்.
கில் சாதிப்பாரா?
உள்ளூரில் அணியை வழிநடத்தாவிட்டாலும், தனது முதல் தொடரையே இங்கிலாந்து அணிக்கு எதிராக அந்நாட்டில் கேப்டன் கில் தொடங்கினார். கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலும், 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என சமன் செய்தார். போதிய அனுபவம் இல்லாத இளம் வீரர்களை கொண்டே, அந்த தொடரை சமன்படுத்தியதே பெரும் வெற்றியாக கருதப்பட்டது. இதையடுத்து உள்ளூரில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர், எந்தவித சவாலும் இன்றி மிகவும் எளிதாக முடிந்தது. இந்நிலையில் தான், வலுவான தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கில் அணி களமிறங்க உள்ளது. இதில் வென்று தன் மீதுள்ள பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு கில் பதிலடி தருவாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.