இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தச் சூழலில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடைபெற உள்ளது. 


 


இந்நிலையில் இந்தப் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று கருதப்படுகிறது. இதன்காரணமாக மாற்று வீரர்கள் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. அதன்படி ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷபாஸ் அகமது ஆகியோர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 


 


இன்றைய போட்டி நடைபெறும் இந்தோர் ஹோல்கர் மைதானத்தில் இந்திய அணி இதுவரை ஒரு முறை கூட தோல்வி அடையவில்லை. இந்த மைதானத்தில் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அவற்றில் இரண்டு முறையும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த மைதானம் சிறிய மைதானம் என்பதால் இங்கு ரன்கள் அதிகமாக பதிவாகும் வாய்ப்புகள் உள்ளன.


 






தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரை அந்த அணி வெற்றியுடன் தொடரை முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இந்திய அணி இந்தப் போட்டியை வென்று ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் உள்ளது. ஆகவே அதை தடுக்க தென்னாப்பிரிக்கா அணி தீவிரமாக முயற்சி செய்யும் என்று கருதப்படுகிறது. டேவிட் மில்லர் மற்றும் குயிண்டன் டி காக் ஃபார்மிற்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு பலமாக உள்ளது. 


தென்னாபிரிக்கா டி20 தொடருக்கு பிறகு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் அக்டோபர் 6ஆம் தேதி ஆஸ்திரேலிய கிளம்ப உள்ளது. இதன்காரணமாக அந்த அணியில் இடம்பெற்ற வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. 


 


இந்திய அணி: ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ராஜட் பட்டிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அவேஷ் கான், முகமது சிராஜ், தீபக் சாஹர்


தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்:


அக்டோபர் 6- முதல் ஒருநாள் போட்டி


அக்டோபர் 9- இரண்டாவது ஒருநாள் போட்டி


அக்டோபர் 11- மூன்றாவது ஒருநாள் போட்டி


 


இந்த ஒருநாள் தொடருக்கு பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி 2 பயிற்சி போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அதன்பின்னர் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது.