இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுவாரா, காயத்தால் விளையாட முடியாமல் போகுமா என்ற குழப்பம் நீடித்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அது தொடர்பாக பேசியுள்ளார்.


இந்தியா - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட்:


நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியுடன் நியூசிலாந்து அணி விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ) மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது.


ரிஷப் பண்ட் விளையாடுவாரா?


முன்னதாக பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது ரிஷப் பண்டிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. காயத்தின் காரணமாக ஃபீல்டிங்கில் இருந்து வெளியேறினாலும், அணிக்காக கடினமான நேரத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பண்ட் 99 ரன்கள் குவித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.






இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுவாரா, காயத்தால் விளையாட முடியாமல் போகுமா என்ற குழப்பம் நீடித்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அது தொடர்பாக பேசியுள்ளார். அதில்,"ரிஷப் பண்ட் விளையாடுவதில் எந்த பிரச்னையும் இல்லை, அவர் நன்றாக இருக்கிறார். நாளை போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்வார்"என்று கூறியுள்ளார்.  


சமூக ஊடகங்கள் முடிவு செய்ய முடியாது:


தொடர்ந்து பேசிய அவர்,"எங்களுடைய பிளேயிங் லெவனை சமூக ஊடகங்கள் முடிவு செய்ய முடியாது. சமூக ஊடகங்கள் அல்லது நிபுணர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எங்களுக்கு முக்கியம் கிடையாது. கேஎல்.ராகுல் கடினமான கான்பூர் ஆடுகளத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் பெரிய ரன் அடிக்க விரும்புகிறார். நாங்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கிறோம். தற்போது கில் சிறந்த டச்சில் இருக்கிறார்.


தற்போது நாங்கள் விளையாடும் அணியை முடிவு செய்யவில்லை. நாளைதான் நாங்கள் அதை முடிவு செய்வோம். நாங்கள் எந்த விளையாடும் அணியை முடிவு செய்தாலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் வர வர டிராக்கள் பெரிய சலிப்பை உண்டாக்கக்கூடியதாக இருக்கிறது. டி20 கிரிக்கெட் பெரிய ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டிரா என்பதை ரசிகர்கள் விரும்புவதில்லை"என்று தெரிவித்துள்ளார் கவுதம் கம்பீர்.