இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 46 ரன்களுக்கு அவுட்டான நிலையில், நியூசிலாந்து அணி 402 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, நெருக்கடியான சூழலில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய சூழலில் ரோகித் சர்மா 52 ரன்களும், விராட் கோலி 70 ரன்களும் எடுக்க சர்ப்ராஸ்கான் - ரிஷப்பண்ட் ஜோடி அபாரமாக ஆடி இந்திய அணியை வலுவான நிலையை நோக்கி அழைத்துச் சென்றது. 


99 ரன்னில் அவுட்:


சிறப்பாக ஆடிய சர்பராஸ்கான் 150 ரன்களில் அவுட்டாக, ரிஷப்பண்ட் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 99 ரன்களில் ரிஷப்பண்ட் நிற்க மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அனைவரும் ரிஷப்பண்ட் சதம் அடிப்பார் என்று ஆர்வத்துடன் இருந்தனர். ஆனால்,  வில்லியம் ஓ ரோர்கி வீசிய அந்த ஓவரின் முதல் பந்திலே இன்சைட் எட்ஜ் ஆகி ரிஷப்பண்ட் போல்டானார். இதனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
இந்திய அணியின் நெருக்கடியான சூழலில் இந்திய அணிக்காக 231 ரன்னில் சர்பராஸ் கானுடன் ஜோடி சேர்ந்தார் ரிஷப்பண்ட். காயம் காரணமாக நியூசிலாந்தின் முதல் இன்னிங்சில் துருவ் ஜோயல் கீப்பிங் நின்ற நிலையில் ரிஷப்பண்ட் களமிறங்குவாரா? என்ற கேள்வி எழுந்தது.


ஆனால், சர்பராஸ் கானுடன் ஜோடி சேர்ந்து அபாரமாக ஆடினார் ரிஷப்பண்ட். ஒரு முனையில் சர்பராஸ் கான் அதிரடி காட்ட தொடக்கத்தில் நிதானமாக ஆடிய ரிஷப்பண்ட் ஒரு கட்டத்திற்கு பிறகு பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினார். குறிப்பாக, அவர் விளாசிய சிக்ஸர் ஒன்று மைதானத்தின் கூரைக்குச் சென்றது.


டெயிலண்டர்கள் காப்பாற்றுவார்களா?


231 ரன்களில் சேர்ந்த சர்பராஸ் கான் – ரிஷப்பண்ட் பார்ட்னர்ஷிப் 408 ரன்களில்தான் பிரிந்தது. சிறப்பாக ஆடிய சர்பராஸ் கான் 195 பந்துகளில் 18 பவுண்டரி 3 சிக்ஸருடன் 150 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவர் சென்ற பிறகும் தனது அதிரடியைத் தொடர்ந்த ரிஷப்பண்ட் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 105 பந்துகளில் 9 பவுண்டரி 5 சிக்ஸருடன் 99 ரன்கள் எடுத்து அவுட்டானார்.


இந்திய அணியின் முக்கிய வீரரான ரிஷப்பண்ட் விபத்திற்கு பிறகு சுமார் இரண்டு ஆண்டு இடைவெளியில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கினார். அந்த தொடரில் சதம் அடித்து அசத்தினார். இந்த நிலையில், இந்த தொடரிலும் முதல் இன்னிங்சில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் 99 ரன்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டார். தற்போது வரை இந்திய அணி 438 ரன்களுக்கு 6 விக்கெட் இழப்பிற்கு ஆடி வருகிறது.   


டெயிலண்டர்கள் சிறப்பாக ஆடினால் மட்டுமே இந்தியாவால் 200 ரன்களுக்கும் மேல் இலக்கை நியூசிலாந்திற்கு நிர்ணயிக்க முடியும்.