இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணி ஸ்ரேயாஸ் சதம், சுப்மன்கில் மற்றும் ஜடேஜா அரைசதங்கள் உதவியுடன் 345 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 296 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. 


அதனை அடுத்து, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால், 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேற்று ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து, தொடக்கத்திலே வில் யங்கின் விக்கெட்டை இழந்தது. இந்த நிலையில், இன்று 5வது நாள் ஆட்டத்தை தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் நடந்த முக்கியமான சம்பவங்களின் ஹைலைட்ஸ் இதோ! 


கடைசி வரை பரபரப்பாக நடந்த இந்த போட்டியில், ஒரு விக்கெட் எடுத்தால் இந்தியாவுக்கு வெற்றி என்ற நிலையில் இருந்தது. ஆனால், போதுமான வெளிச்சம் இல்லை என்ற காரணத்தில் போட்டி முடித்து கொள்ளப்பட்டது. இதனால், தோல்வியில் இருந்து நியூசிலாந்து தப்பித்திருக்கிறது. போட்டி டிராவில் முடிந்துள்ளது.


1. நியூசிலாந்து வீரர்கள் டாம் லாதமும், வில்லியம் சோமர்வில்லேவும் மேற்கொண்டு விக்கெட் விழுந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக ஆடினர்.  இந்த ஜோடியை பிரிப்பதற்கு இந்திய கேப்டன் ரஹானே சுழற்பந்து வீச்சு ஜாம்பவான்கள் அஸ்வின், ஜடேஜா, அக்‌ஷர் படேலை மாறி, மாறி பயன்படுத்தினார். மறுமுனையில் இஷாந்த் சர்மாவும், உமேஷ் யாதவும் வேகப்பந்துவீச்சில் குடைச்சல் கொடுத்தனர்.


2. உணவு இடைவேளை வரை நியூசிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 35 ஓவர்களில் 79  ரன்களை எடுத்தது. இந்திய அணி முதல்பாதி ஆட்டத்தில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை.


3. இரண்டாம் பாதி ஆட்டத்தில், இன்றை நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்த டாம் லாதமை பெவிலியனுக்கு அனுப்பினார் அஷ்வின். அவரை அடுத்து வரிசயாக நியூசிலாந்து பேட்டர்களின் விக்கெட்டுகளை எடுத்தனர் இந்திய பவுலர்கள்.


4. மிடில் ஆர்டரில் களமிறங்கிய ராஸ் டேலர், ஹென்ரி நிக்கோல்ஸ் ஆகியோர் சொற்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து நியூசிலாந்துக்கு ஏமாற்றத்தை தந்தனர். இதனால், போட்டியை டிரா செய்ய வேண்டிய பொறுப்பிற்கு கேப்டன் வில்லியம்சனும், ப்ளென்டலும் தள்ளப்பட்டனர்.


5. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், டாம் ப்ளெண்டலின் விக்கெட்டையும் வீழ்த்தினார் அஷ்வின். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 419வது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், ஹர்பஜன் சிங் டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட் வீழ்த்தி இருக்கும் சாதனையை முறியடித்திருக்கிறார். தற்போது அதனை அஸ்வின் 80 டெஸ்ட் போட்டிகளிலேயே தாண்டியுள்ளார்.






6. அடுத்து ஜேமிசன், டிம் சவுதி ஆகியோர் அவுட்டாக 9 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாறி வந்த நிலையில், ஒரே ஒரு விக்கெட் எடுத்தால் வெற்றி என்ற முனைப்பில் இந்தியா விளையாடியது. வெளிச்சம் குறைந்து கொண்டே வந்ததால் போட்டி தொடர்ந்து நடைபெறுமா இல்லையா என்று பரபரப்பு கடைசி வரை இருந்தது.


7. ஆனால், போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தால் இன்றைய நாளுக்கான போட்டி முடித்து கொள்ளப்பட்டது.






8. இந்திய அணி பவுலர்களை பொறுத்தவரை, இரண்டாவது இன்னிங்ஸில், ஜடேஜா 4 விக்கெட்டுகளும், அஷ்வின் 3 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கின்றனர்.


9. நியூசிலாந்து பேட்டர் ரச்சின் ரவீந்திரா கடைசி வரை களத்தில் நின்று டிரா ஆவதற்கு முக்கிய பங்காற்றினார். 91 பந்துகளை எதிர்கொண்ட அவர் 18 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். அவரோடு கடைசி விக்கெட்டிற்கு அஜாஸ் பட்டேலும் களத்தில் நின்றார்.


10. போட்டி டிராவில் முடிந்துள்ளதால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டிருக்கிறது.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண