வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவிற்குள் சுற்றுப்பயணம் மேற்கொணடு கிரிக்கெட் தொடர் ஆடி வருகிறது. இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தவறவிட்ட வங்கதேச அணி தற்போது டி20 தொடரையும் முழுமையாக இழந்துள்ளது.


சாம்சன் சதம்:


இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதிய இந்த டி20 தொடரில் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் தலைமை தாங்கினர். இரு அணிகளும் மோதிய முதல் 2 போட்டிகளை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. ஹைதரபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது.


ஐ.பி.எல். போட்டிகளில் மிரட்டலான பே்டடிங்கை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் இந்திய அணிக்காக இதுவரை மிரட்டலான இன்னிங்சை இதுவரை வெளிப்படுத்தியதில்லை. அவரது மிரட்டலான பேட்டிங்கை காட்டும் நாளாக நேற்று அமைந்தது. மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 4 ரன்களில் அவுட்டாக, அடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ்வுடன் இணைந்து பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறக்கவிட்டார். மறுமுனையில் சூர்யகுமார் யாதவும் சிக்ஸர், பவுண்டரி விளாசினார்.

முதல் இந்தியர்:


சிக்ஸர் மழையும், பவுண்டரி மழையும் பொழிந்த இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் வங்கதேச பந்துவீச்சாளர்கள் விழிபிதுங்கி நின்றனர். குறிப்பாக, சாம்சன் பேட்டிங்கில் மிரட்டினார். அபாரமாக ஆடிய அவர் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை விளாசினார். சர்வதேச டி20 போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனே என்பது குறிப்பிடத்தக்கது.


அபாரமாக ஆடிய சாம்சன் 47 பந்துகளில் 11 பவுண்டரி 8 சிக்ஸருடன் 111 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்தபோது இந்திய அணி 13.4 ஓவர்களில் 196 ரன்களை எடுத்திருந்தது. அதன்பின்பு, களமிறங்கிய ரியான் பராக் 13 பந்துககளில் 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுக்க, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில்  8 பவுண்டரி 5 சிக்ஸருடனன் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில் ஹர்திக் பாண்ட்யா 18 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் எடுத்தது.

அதிக ரன்:


298 என்ற மிரட்டலான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் இந்திய அணி எடுத்த 297 ரன்களே இந்திய அணி டி20 போட்டியில் அடித்த அதிக ரன் ஆகும்.  மேலும், டி20 போட்டிகளில் அதிக ரன் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற 3வது மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.