வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் 2 தோல்விகளுடன் தொடரை இழந்த இந்திய அணி, ஆறுதல் வெற்றிபெறும் முனைப்பில் இன்று களமிறங்கியது. முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்கள் குவித்தது. 


இந்திய அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 210 ரன்களும், விராட் கோலி 113 ரன்களும் எடுத்திருந்தனர். 


வங்கதேச அணி 182 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 


இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆடவர் அணி சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நாட்டில் தனது மிகப்பெரிய ஒருநாள் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 


மிகப்பெரிய வெற்றிகள் (இந்திய ஆண்கள் அணி): 



  • 227 ரன்கள் - vs வங்கதேசம் - சட்டோகிராம், இன்று

  • 200 ரன்கள் - vs வங்கதேசம் - டாக்கா, 2003

  • 168 ரன்கள் - vs இலங்கை - கொழும்பு, 2017

  • 161 ரன்கள் - vs ஜிம்பாப்பே - ஹராரே, 2005

  • 147 ரன்கள் - vs இலங்கை - கொழும்பு , 2009


400 ரன்கள் குவித்த இந்தியா:


வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் 2 தோல்விகளுடன் தொடரை இழந்த இந்திய அணி, ஆறுதல் வெற்றிபெறும் முனைப்பில் இன்று களமிறங்கியது. முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். வழக்கம்போல் ஷிகர் தவான் ஒற்றை இலக்கை எண்ணுடன் வெளியேற, இஷான் கிஷன் தனக்கே உண்டான பாணியில் அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். 


3வது வீரராக களமிறங்கிய விராட் கோலி ஒரு முனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் இஷான் கிஷன் வேகம் மாண்டஸ் புயலை விட அதிவேகமாக இருந்தது. 


தொடக்கம் முதல் நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த இஷான் கிஷன் 49 பந்தில் அரைசதம் அடித்தார்.  அதன் பின்னர் அடித்து ஆடிய இஷான் கிஷன் பங்களாதேஷ் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் பறக்கவிட்டார். இஷான் கிஷன் 90 ரன்களில் இருந்த போது சிக்ஸர் அடிக்க முயற்சி செய்த போது கேட்ச் ஆகி தனது விக்கெட்டினை இழந்திருப்பார். ஆனால், கொடுத்த கடினமான கேட்ச்சை தவறவிடவே கண்டத்தில் இருந்து தப்பி, சதம் விளாசியுள்ளார்.  சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தினை இஷான் கிஷன் பதிவு செய்தார். 


ருத்ரதாண்டவமாடிய இஷான் கிஷன் 126 பந்தில் இரட்டைச் சதம் விளாசி அதகளப்படுத்தியுள்ளார். மேலும் இந்த இரட்டைச் சதத்தின் மூலம் இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான தோனி மற்றும் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். மேலும், இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான சச்சின், சேவாக் ஆகியோரது சாதனையை சமன் செய்துள்ளார். சர்வதேச அரங்கில் அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் எனும் சாதனையையும் அவர் படைத்துள்ளார். 


மேலும் குறைந்த பந்தில் இரட்டைச் சதம் விளாசிய வீரர் எனும் உலக சாதனையையும் படைத்தார். அதிரடியாக ஆடிவந்த இஷான் கிஷன் 131 பந்தில், 210 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.


அடுத்து வந்த பின்வரிசை வீரர்களான ஷ்ரேயஸ் ஐயர் 3 ரன்களும், கேஎல் ராகுல் 8 ரன்களும், தாக்கூர், 3 ரன்களும் எடுத்து வெளியேறினர். ஓரளவு தாக்குபிடித்து ஆடிய வாஷிங்டன் சுந்தர் 37 ரன்களும், அக்சார் பட்டேல் 20 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர். 


தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்கள் எடுத்து, 410 ரன்கள் வங்கதேச அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. இதன்மூலம் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டியில் 6வது முறையாக 400 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளது. 


182 ரன்களுக்குள் ஆல் அவுட்:


410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக அனாமுல் ஹக் மற்றும் கேப்டன் லிட்டன் தாஸ் களமிறங்கினர். வங்கதேச அணி 33 ரன்கள் எடுத்திருந்தபோது 8 ரன்கள் அடித்திருந்த அனாமுல் ஹக், அக்சார் வீசிய 5 வது ஓவரில் சிராஜிடம் கேட்சானார். தொடர்ந்து, கேப்டன் லிட்டன் தாஸ் 29 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த முஷ்பிகுர் ரஹீமும் 7 ரன்களில் நடையைக்கட்டினார். 


அனுபவ வீரர் ஷகிப் அல் ஹாசன் வழக்கம்போல் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். மறுபுறம் வங்கதேச அணியின் விக்கெட்கள் மளமளவென சரிந்தாலும், ஷகிப் அல் ஹாசன் தனது பாணியில் நிதானமாக ஆடி 50 பந்துகளில் 43 ரன்கள் குவித்து குல்தீப் யாதவ் வீசிய 23 வது ஓவரில் க்ளீன் போல்டானார். 


அடுத்து களமிறங்கிய யாசிஷ் அலி அதிகபட்சமாக 25 ரன்களும், மஹ்முதுல்லாஹ் 20 ரன்களும் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து, உள்ளே வந்த பின்வரிசை வீரர்கள் தங்கள் விக்கெட்டை பறிகொடுக்க 182 ரன்களுக்குள் வங்கதேச அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது.