ரோகித் சர்மா எப்போதுமே தனது ஹிட் பேட்டிங்கால் ’ஹிட் மேன்’ என்ற பெயர் பெற்றவர். இந்திய அணிக்காக பல போட்டிகளில் தனித்து நின்று வெற்றிபெற்று தந்துள்ளார். அதேபோல், நேற்று வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் காயம் அடைந்த பிறகும், ரோகித் சர்மா அதிரடியாக பேட்டிங் செய்து அனைவரது மனதையும் வென்றார். நேற்றைய போட்டியில் 28 பந்துகளில்  (3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) 51 ரன்கள் குவித்தார். நேற்றைய இன்னிங்ஸில் 5 நீண்ட சிக்ஸர்களை அடித்ததன் மூலம் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். 


நேற்றைய வங்கதேசத்திற்கு எதிராக மூன்றாவது சிக்ஸரை அடித்ததன்மூலம், ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும், உலகளவில் இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் படைத்துள்ளார். இவருக்கு முன்னோடியாக சர்வதேச கிரிக்கெட்டில் 553 சிக்ஸர்கள் அடித்து கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். வேறு எந்த இந்திய வீரரும் 400 சிக்ஸர்களுக்கு மேல் அடித்ததில்லை. இந்திய வீரர்களில் 359 சிக்ஸர்களுடன் தோனி ரோஹித்துக்கு மிக நெருக்கமாக உள்ளார்.


476 சிக்ஸர்கள் அடித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி மூன்றாம் இடத்திலும், 398 சிக்ஸர்களுடன் பிரண்டன் மெக்கலம் நான்காம் இடத்திலும் உள்ளனர். மற்றொரு நியூசிலாந்து வீரரான மார்டின் கப்தில் 383 சிக்ஸர்களுடன் 5வது இடத்தில் உள்ளார். 


இந்த டாப் 5 பேட்ஸ்மேன்களில் ரோகித் சர்மா மற்றும் மார்டின் கப்தில் மட்டுமே சர்வதேச அளவில் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


ரோகித் காயம்: 


நேற்றைய போட்டியின் 2வது ஓவரை வீசிய முகமது சிராஜின் பந்தை எதிர் கொண்ட அனுமல் அடித்த பந்து, செகண்ட் ஸ்லிப்பில் நின்று கொண்டு இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவிடம் சென்றது. பந்தை பிடிக்க முயன்ற ரோகித்துக்கு காயம் ஏற்படவே, மைதானத்தில் இருந்து வெளியேறினார். காயத்தின் தன்மை அதிகமாக இருக்கவே அவர் தற்போது மருத்துவமனைக்குச் சென்றார். இவருக்கு பதிலாக மாற்று வீரராக ராஜத் படிதார் களமிறங்கினார். 


மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரோகித்துக்கு சிகிச்சையின் போது காயமடைந்த பகுதியில் பல தையல்கள் போடப்பட்டன. இதையடுத்து, 7 விக்கெட்டுகள் இழந்து இந்திய அணி தடுமாறியது. 


41 பந்துகளில் 63 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது. இதையடுத்து வேறு வழியில்லாததால் கையில் காயம் ஏற்பட்ட ரோகித் சர்மா, 9 வது வீரராக களமிறங்கினார். அதிரடியாக விளையாடினால் இந்திய அணி நிச்சயம் வெற்றிபெறும் என்ற மனநிலையில் களமிறங்கிய ரோகித், ஆரம்பம் முதலே காயத்துடன் அதிரடிகாட்ட தொடங்கினார். 


43வது ஓவரில் 207/7 என்ற நிலையில் இந்தியா போராடி வந்த அவர், மறுமுனையில் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தாலும் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் அடித்து நொறுக்கத் தொடங்கினார். கடைசி ஓவரில், இந்தியாவுக்கு 6 பந்துகளில் 20 ரன்கள் தேவை, கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது, ரோஹித் அதை கடைசி பந்தில் 6 ரன்களுக்கு கொண்டு வந்தார். ஆனால் கடைசி பந்தில் வங்கதேச வேகபந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் அற்புதமான யார்க்கர் லெந்த் பந்து வீச, வங்கதேசம் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.