வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முகமது சிராஜ் நடந்து கொண்ட விதம் ஆஸ்திரேலிய அணியை போல் உள்ளது என விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். 


இந்தியா வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் படி, களம் இறங்கிய வங்கதேச அணி பேட்டிங்கை தொடங்கியது. போட்டியின்போது இந்திய வீரர் முகமது சிராஜ் வீசிய 8-வது  ஓவரினை வங்கதேச வீரர் ஷாண்டோ எதிர் கொண்டார். அந்த ஓவரின் முதல் பந்தினை ஃபவுண்ட்ரிக்கு விரட்டிய ஷாண்டோ, அடுத்த இரண்டு பந்துகளை மிகவும் கவனமாக கையாண்டார். 4வது பந்தினை மிகவும் லாவகமாக கையாண்ட ஷாண்டோவின் அருகில் சென்ற முகமது சிராஜ் அவரைப் பார்த்து மிகவும் ஆவேசமாக ஏதோ கூறினார். இதனை எதிர்பார்க்காத  வங்கதேச வீரர் முகமது சிரஜை அதிர்ச்சியாகப் பார்த்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


முகமது சிராஜின் இந்த செயல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் செய்யும் செயலைப்போல் உள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், இது ஒரு ஸ்போர்ட்ஸ் மேன் ஷிப்புக்கு அழகல்ல என பலரும் விமர்சித்து வருகின்றனர். 


அதேபோல், போட்டியின் 2வது ஓவரை வீசிய முகமது சிராஜின் பந்தை எதிர் கொண்ட அனுமல் அடித்த பந்து, செகண்ட் ஸ்லிப்பில் நின்று கொண்டு இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவிடம் சென்றது. பந்தை பிடிக்க முயன்ற ரோகித்துக்கு காயம் ஏற்படவே, மைதானத்தில் இருந்து வெளியேறினார். காயத்தின்தன்மை அதிகமாக இருக்கவே அவர் தற்போது மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இவருக்கு பதிலாக மாற்று வீரராக ராஜத் படிதார் களமிறங்கியுள்ளார். 


தற்போது அணியை  துணை கேப்டன் கே.எல். ராகுல்  வழிநடத்தி வருகிறார். தற்போது வங்கதேச அணி 31 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து தடுமாறிவருகிறது. 


இந்திய அணி வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்து வங்க தேச அணியிடம் பரிதாபமாகத் தோல்வியுற்றது. 


தொடரை தக்கவைக்குமா இந்தியா?


மேலும், முதல் ஒருநாள் போட்டியில் ஸ்லோ ஓவர் ரேட்டை உபயோகித்ததாக இந்திய அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 80 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டு முன்மொழியப்பட்ட அனுமதியை ஏற்றுக்கொண்டார். எனவே முறையான விசாரணை தேவையில்லை என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


முதல் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வங்க தேச அணி தொடரைக் கைப்பற்றும் உறுதியுடன் இன்று களமிறங்கும் நிலையில், அதேபோல், இன்றைய போட்டியில் வென்று இந்தியா தொடரைத் தக்க வைக்குமா என ரசிகர்களுக்கு எதிர்ப்பார்த்து காத்துள்ளனர்.


ஷேர் இ பங்களா மைதானத்தில் மைதானத்தில் 22 போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணி 14 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியையும் தழுவியுள்ளது. மழை காரணமாக ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.


ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர் தோல்விக்கு பிறகு, இந்திய அணி அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது. இதற்காக டி20 உலகக் கோப்பை பின் நியூசிலாந்து சென்ற இந்திய அணி டி20 தொடரை வென்ற கையோடு, ஒருநாள் தொடரை இழந்தது. 


அந்த தொடரில் டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவானும் தலைமை தாங்கினர்.


மற்ற தொடர்கள், மற்ற நாடுகள் சுற்றுபயணம் மேற்கொள்ளும்போது வங்கதேச அணி தடுமாறினாலும், தனது சொந்த மண்ணில் எதிரணிகளை புலியாக புரட்டி எடுத்து வருகிறது. கடைசியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு டி20 தொடரை வென்றது. அதேபோல், கடந்த 2015ம் ஆண்டு சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் வென்றது. அதேபோல், 2007 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி, வங்கதேசத்திற்கு தோல்வியடைந்தது இன்றளவும் யாராலும் மறக்க முடியாதது.