இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வங்கதேசம் 2-0 என்ற கணக்கில் வென்றது. கேப்டன் ரோகித், ஸ்ரேயாஸ், அக்சர் படேல் ஆகியோரின் அரை சதம் வீணானது.


இந்தியா வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், முதலில் களம் இறங்கிய வங்கதேச அணி பேட்டிங்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தொடக்க வீரர்களான அனாமுல் ஹக் மற்றும் லிட்டன் தாஸ் வந்த வேகத்தில் வெளியேற, அடுத்து வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ 35 பந்துகளில் 21 ரன்கள் அடித்து வெளியேறினார். 


வங்கதேச அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஷகில் அல் ஹாசன் 20 பந்துகளில் 8 ரன்களை எடுத்திருந்தபோது, வாஷிங்டன் சுந்தர் வீசிய 17 வது ஓவரை எதிர்கொண்டார். அப்போது அடிக்க முயற்சித்த ஷகிக் அல் ஹாசன் பந்தை மேலே உயர்த்தி ஷிகர் தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 


தொடர்ந்து, கடந்த சில போட்டிகளாக சொதப்பிவரும் முஷ்பிகுர் ரஹீம் 24 பந்துகளில் 12 ரன்கள் எடுத்துபோது மீண்டும் வாஷிங்டன் சுந்தர்- தவான் ஜோடி பிரிக்க, அடுத்து வந்த அஃபிஃப் ஹொசைனும் தான் சந்தித்த முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 


அதன்பிறகு, மஹ்முதுல்லா உடன் ஜோடி சேர்ந்த அஃபிஃப் ஹொசைன் இந்திய அணியின் பந்துவீச்சை பதம் பார்க்க தொடங்கினர்.


46.1 ஆவது ஓவரில் மஹ்முதுல்லா அடிக்க முயன்ற பந்தை ஒற்றை கையில் பல்டி அடித்து விக்கெட் கீப்பர் ராகுல் கேட்ச் செய்தார்.






இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஓவரை உம்ரான் மாலிக் வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது மஹ்முதுல்லா 96 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்தார்.


271 ரன்கள் குவித்த வங்கதேச அணி:


50 ஓவர் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு 272 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்தது.


விளையாடிய இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரராக களம் புகுந்த விராட் கோலி, 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.


மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவன், 8 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.  6.1 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்தது. 10 ஓவர்கள் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 3 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது. வாஷிங்டன் சுந்தர் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். 13.3 ஆவது ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்களை எடுத்தது.


18.3 வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கே.எல்.ராகுல், 18 பந்துகளில் 14 ரன்களே எடுத்திருந்தார். ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல் ஆகியோர் அரை சதம் அடித்தும் பலனளிக்காமல் போனது. இறுதியில் கடைசி பாலில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.