கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கியது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர். மொத்தம் 10 அணிகள் பங்குபெற்ற இந்த தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இதில், இந்தியா,தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 


 


இந்த அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணியும், தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. அதன்படி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இறுதி போட்டி நடைபெற்றது.


 


ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற  இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினார்கள். இதில், ரோகித் சர்மா 31 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 47 ரன்கள் எடுத்தார். மறுபுறம் களத்தில் நின்ற சுப்மன் கில் 4 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த விராட் கோலி 54 ரன்களும் கே.எல்.ராகுல் 66 ரன்கள் எடுத்தனர். இவ்வாறாக 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.


பின்னர், 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர்  மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினார்கள். இதில் டேவிட் வார்னர் 7 ரன்களில் விக்கெடை பறிகொடுக்க மிட்செல் மார்ஷ் 15 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுக்க  டிராவிஸ் ஹெட் கடைசி வரை களத்தில் நின்று ஆஸ்திரேலிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றர். அதிரடியாக விளையாடிய அவர், 95 பந்துகளில்சதம் விளாசினார்.  மறுபுறம் அவருக்கு ஜோடியாக களத்தில் நின்ற மார்னஸ் லாபுசாக்னே அதிரடியாக அரைசதம் அடித்தார். இவ்வாறாக ஆஸ்திரேலிய அணி 6 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.