IND VS AUS 1ST TEST:சதம் விளாசி நிலைத்து இன்று ஆடிவந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா அவுட் ஆகி வெளியேறியுள்ளார். 


இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான  பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் போட்டித் தொடர் நாக்பூரில் நடைபெற்று வருகிறது, இதில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின்னர் இறங்கிய இந்திய அணி, நிதானமாக விளையாடி வருகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். அதன் பின்னர் நிதானமாக விளையாடி வந்த ரோகித், பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அவர், 212 பந்துகளில் 120 ரன்கள் விளாசிய நிலையில் அவுட் ஆனார். 




ரோகித் சர்மா புதிய சாதனை:


அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் விளாசிய முதல் இந்திய கேப்டன் எனும் பெருமையை, ரோகித் சர்மா பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது ஒன்பதாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்ததன் மூலம், அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். முன்னதாக இலங்கையை சேர்ந்த தில்ஷன்,  தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த  டூ பிளெசிஸ் மற்றும்  பாகிஸ்தானை சேர்ந்த பாபர் ஆசம் ஆகிய 3 பேர் மட்டுமே, ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்து இருந்தனர். அந்த பட்டியலில் தற்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் இணைந்துள்ளார்.  தொடக்க ஆட்டக்காரராக 21 இன்னிங்ஸில் களமிறங்கியுள்ள அவர் அடிக்கும் 6வது சதம் இதுவாகும்.


இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து, களமிறங்கிய அந்த அணி வீரர்கள், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அணியில் 7 பேர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானார்.


250 சிக்சர்களை விளாசிய ரோகித்:


இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும், துணை கேப்டன் கே.எல்.ராகுலும் நல்ல தொடக்கத்தை அளித்தனர். ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, ரோகித் சர்மா சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசினார். முதல் நாளில் ஒரு சிக்சர் விளாசியதன் மூலம், இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 250 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ரோகித் 56 ரன்கள் எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இரண்டாவது நாளில் சதம்:


போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது, ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் மர்பி சுழலில் சிக்கி, அஸ்வின் மற்றும் புஜாரா ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதேநேரம், மறுமுனையில் ரோகித் சர்மா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வப்போது பவுண்டரிகளையும் விளாசினார். இதன் மூலம், ரோகித் சர்மா 171 பந்துகளில் டெஸ்ட் போட்டிகளில் தனது 9வது சதத்தை பூர்த்தி செய்தார். இதில் 14 பவுண்டரிகள் 2 சிக்சர்களும் அடங்கும்.


ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் சதம்:


முன்னதாக, கடந்த 2021ம் அண்டு செப்டம்பர் மாதம் தான் அவர் கடைசியாக டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசி இருந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில், அவர் 127 ரன்களை சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியுள்ளார்.  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா அடிக்கும் முதல் சதம் இதுவாகும்.


ரோகித் அவுட்


தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேனினார். அவர் 212 பந்துகளில் 120 ரன்கள் சேர்த்தார். மேலும் இந்த போட்டியில் அவர், 15 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.