ஆஸ்திரேலியாவின் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மழை காரணமாக பல ஜாம்பவான் அணிகளின் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு சமமாக புள்ளிகள் வழங்கப்பட்டது. இதனால் எந்த அணி அரையிறுதிக்கு செல்லும்? யார் வெளியேறுவார்கள் என்ற சூழ்நிலை நீட்டித்து வருகிறது.


இந்தநிலையில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளுக்கு மூன்றாவது சுற்று போட்டி தற்போது நடைபெற்றுவருகிறது. அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்று போட்டிகள் நடக்கிறது. முதல் போட்டியில் வங்கதேசமும், ஜிம்பாவே அணிகளும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானும், நெதர்லாந்தும், மூன்றாவது போட்டியில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதுக்கின்றனர். 


இந்திய அணியை பொறுத்தவரை குரூப் பி பிரிவில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை வீழ்த்தி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில்  கிட்டதட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும். 


அதேபோல், தென்னாப்பிரிக்கா அணி இதுவரை இந்த தொடரில் வங்கதேசத்திற்கு எதிராக ஒரு வெற்றியும், ஜிம்பாவே எதிரான போட்டியில் மழையால் ஒரு புள்ளியும் பெற்றுள்ளது. 


இந்திய அணி சார்பில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் நல்ல பார்மில் உள்ளனர். கே.எல்.ராகுல் கடந்த 2 போட்டிகளை போல் இல்லாமல் இந்த போட்டியில் பார்மிற்கு திரும்பினால் இந்திய அணியின் பலம் கைக்கூடும். பந்து வீச்சை பொறுத்தவரை புவனேஷ்வர் குமார், ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் வேகமும், அஷ்வின் சுழலும் கைக்கொடுக்கிறது. இன்றைய போட்டியிலும் இந்த கூட்டணி அசத்தினால், தென்னாப்பிரிக்கா அணி நிச்சயம் திணறும். அதேபோல், அக்சார் பட்டேலுக்கு பதில், தீபக் ஹூடா களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்த்திக் பாண்டியா ரன் வேகத்தை கூட்டினால் இந்திய அணியின் ஸ்கோர் உச்சம் பெறும். 


தென்னாப்பிரிக்கா அணியில் ரோசோவ் எதிரணிக்கு பயம் காட்டி வருகிறார். கடந்த இந்திய அணிக்கு எதிரான தொடரிலும் சதம் அடித்து மிரட்டிய ரோசோவ், கடந்த வங்க தேசத்திற்கு எதிராகவும் சதம் கண்டார். டி காக் வழக்கம்போல் சிறப்பான தொடக்கம் தரும் பட்சத்தில், தென்னாப்பிரிக்கா அணியின் மற்றொரு தொடக்க வீரரும், கேப்டனுமான பவுமா பார்ம் இன்னும் கேள்விகுறியாகவே உள்ளது. மிடில் ஆர்டரில் மில்லரின் மிரட்டல் அடி, பவுலிங்கில் நார்ட்ஜே, ராபாடா ஆகியோர் வேகத்தில் இந்திய அணிக்கு எதிராக அசத்தலாம். 


இருப்பினும், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இந்த போட்டியில் இந்தியாவிற்கு வெற்றி பெறும் என்று பல ஜாம்பவான்களும் கருத்து தெரிவித்துள்ளனர். பெர்த்தில் நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.


ஹெட் டூ ஹெட் :


சர்வதேச டி20 போட்டிகளை பொறுத்தவரையில் இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளது. அதில், இந்தியா 13 முறையும், தென்னாப்பிரிக்கா 9 முறை வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளுக்கு முடிவில்லை. 


அதேபோல், உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை இரு அணிகளும் 5 முறை மோதியுள்ளது. அதிலும் இந்தியா 4 முறையும், தென்னாப்பிரிக்கா ஒரே ஒரு முறையும் வெற்றி கண்டுள்ளது. 


கணிக்கப்பட்ட இந்திய அணி:


கேஎல் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்),  விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், முகமது ஷமி,  புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்


கணிக்கப்பட்ட தென்னாப்பிரிக்க அணி:


 குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்),  டெம்பா பவுமா(கேப்டன்),  ரிலீ ரோசோவ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர்,  டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல்/மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், அன்ரிச் நார்ட்ஜே, லுங்கிங்கிடி,ரபாடா