Cricket World Cup Golden Bat Winners: உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசியவர்களுக்கு வழங்கப்படும்,  தங்க பேட் வென்ற வீரர்களின் பட்டியலில் இந்தியர்களே அதிக ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். 


உலகக்கோப்பை தொடர்:


ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா,  அக்டோபர் 5-ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கி இந்தியாவின் 10 நகரங்களில் கோலாகலமாக நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து உட்பட ஒவ்வொரு அணியும் கோப்பையை வெல்ல தங்களை தயார்படுத்தி வருகின்றன. உள்ளூரில் நடைபெறுவதால், 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோப்பையை கைப்பற்ற இந்தியா சற்று கூடுதலாகவே தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கு வழங்கப்படும், தங்க பேட்டை இதுவரை யார் யார் வென்றுள்ளனர் என்பதை இங்கு அறியலாம். 1975ம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற 12 உலகக்கோப்பை தொடர்களில் 4 முறை இந்தியர்கள் தான் அந்த பரிசை வென்றுள்ளனர்.


 01. கிளென் டர்னர்:


1975ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக்கோப்பை தொடரில், அதிக ரன்களை குவித்ததற்கான தங்க பேட்டை, நியூசிலாந்தை சேர்ந்த கிளென் டர்னர் கைப்பற்ற்னார். அந்த தொடரில் நான்கு இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் 333 ரன்களை குவித்தார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 171 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.


02. கார்டன் கிரீனிட்ஜ்


1979ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த கார்டன் கிரீனிட்ஜ் 4 இன்னிங்ஸ்களில், 253 ரன்களை குவித்தார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 106 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது.


03. டேவிட் கோவர்


இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் கோவர் 1983ம் ஆண்டிற்கான தங்க பேட்டை தன் வசப்படுத்தினார். அந்த தொடரில் 7 இன்னிங்ஸ்களில் விளையாடிய இவர், 384 ரன்களை குவித்தார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 130 ரன்களை சேர்த்தார். இந்த தொடரில் தான் இந்திய அணி தனது முதல் உலகக்கோப்பை தொடரை கைப்பற்றியது.


04.கிரஹாம் கூச்


1987ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் மீண்டும் இங்கிலாந்தைச் சேர்ந்த கிரஹாம் கூச் என்பவர், 471 ரன்களை குவித்து தங்க பேட்டை வென்று அசத்தினார். 8 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர், ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 115 ரன்களை சேர்த்தார்.


05.மார்ட்டின் குரோவ்


1992ம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்ததற்கான தங்க பேட்டை, ஆஸ்திரேலியாவை சேர்ந்த மார்ட்டின் குரோவ் வென்றார். அந்த தொடரில்  9 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் 456 ரன்களை சேர்த்தார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 100 ரன்களை சேர்த்தார். 


06. சச்சின் டெண்டுல்கர்:


உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்ததற்காக வழங்கப்படும், தங்க பேட்டை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை 1996ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் பெற்றார். அந்த தொடரில் 7 இன்னிங்ஸ்களில் விளையாடிய சச்சின் 523 ரன்களை விளாசியதோடு, அதிகபட்சமாக ஒரு போட்டியில் 137 ரன்களை அடித்தார்.


07. ராகுல் டிராவிட்:


தொடர்ந்து அதற்கடுத்த தொடரிலேயே இரண்டாவது இந்தியா வீரராக,  டிராவிட் அதிக ரன்களை சேர்த்ததற்கான தங்க பேட்டை தனதாக்கினார். அந்த தொடரில் 8 இன்னிங்ஸ்களில் விளையாடி 461 ரன்களை குவித்தார். ஒரு போட்டியில் அதிகபட்சமாக 145 ரன்களை சேர்த்து அதகளப்படுத்தினார்.


08. சச்சின் டெண்டுல்கர்:


2003ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் மீண்டும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் டெண்டுல்கர், 11 இன்னிங்ஸ்களில் 673 ரன்களை குவித்தார். இதன் மூலம் உலகக்கோப்பை தொடர்களில் இரண்டு முறை தங்கம் வென்ற முதல் வீரர் மற்றும் தற்போது வரையில் ஒரே வீரர் என்ற பெருமையை சச்சின் பெற்றுள்ளார். அந்த தொடரில் சச்சின் அதிகபட்சமாக 152 ரன்களை விளாசினார்.


09. மேத்யூ ஹைடன்


2007ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரரான ஹைடன், 10 இன்னிங்ஸ்களில் 659 ரன்களை குவித்தார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 158 ரன்களை விளாசினார்.


10. திலகரத்ன தில்ஷான்


2011ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை வந்த இலங்கை அணி, இந்தியாவிடம் தோல்வ்யுற்ற கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டது. இருப்பினும் , அந்த தொடரில் சிறப்பாக விளையாடிய தில்ஷன், 9 இன்னிங்ஸ்களில் 500 ரன்களை சேர்த்து தங்க பேட்டை தனதாக்கினார்.  அந்த தொடரில் அதிகபட்சமாக 144 ரன்களை விளாசினார்.


11. மார்டின் கப்தில்:


2015ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்குச் செல்ல, கப்தில் முக்கிய பங்கு வகித்தார்.  9 இன்னிங்ஸ்களில் 547 ரன்களை சேர்த்த அவர், ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 237 ரன்களை சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதுநாள் வரையில் உலகக்கோப்பை தொடரில் தனிநபரின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.


12. ரோகித் சர்மா:


இறுதியாக கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் ரோகித் சர்மா, அதிக ரன்கள் குவித்ததற்கான தங்க பேட்டை வென்றார். அந்த தொடரில் 9 இன்னிங்ஸ்களில் விளையாடி 648 ரன்களை சேர்த்தார். அதிகபட்சமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 140 ரன்களை குவித்தார். அதோடு, அந்த தொடரில் 5 சதங்களை விளாசி, உலகக்கோப்பையில் ஒரு தொடரில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார்.