ஐசிசியின் சர்வதேச டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை ஒவ்வொரு மாதமும் வெளியாகும். அந்தவகையில் தற்போது மீண்டும் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை வெளியாகியுள்ளது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது 4-1 என்ற கணக்கில் வென்றது. இந்தத் தொடரில் சூர்யகுமார் யாதவ் 135 ரன்கள் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் இந்திய அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் மீண்டும் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளார். அத்துடன் முதலிடத்தில் உள்ள பாபர் அசாமிற்கும் இவருக்கும் இடையேயான புள்ளிகள் இடைவெளி சற்று குறைந்துள்ளது. தற்போது முதலிடத்திலுள்ள பாபர் அசாம் 818 புள்ளிகளை பெற்றுள்ளார்.
அவருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்திலுள்ள சூர்யகுமார் யாதவ் 805 புள்ளிகளை பெற்றுள்ளார். சூர்யகுமார் யாதவ் அடுத்து நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்தப் புள்ளிகள் இடைவெளியை குறைத்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் முன்னேற்றம் கண்டுள்ளார். இவர் இந்தத் தொடரில் 115 ரன்கள் எடுத்திருந்தார். இதன்காரணமாக 6 இடங்கள் முன்னேறி 19வது இடத்திற்கு வந்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரை தொடர்ந்து இந்திய அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் மற்றொரு அணியும் இணைந்து ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளன. இதில் இந்தியா,பாகிஸ்தான் மற்றும் தகுதி பெறும் ஒரு அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் மாதம் 27ம் ம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
15 ஆசியக் கோப்பைக்கான தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணிடுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதவுள்ளன. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் பாகிஸ்தான் - இந்திய அணிகளின் அனல் பறக்கும் மோதல் 28ம் தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கவுள்ள இந்த தொடரானது ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. குரூப் போட்டிகளின் முடிவில் இரண்டு குரூப்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் விளையாடும்.
சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இம்முறை ஆசிய கோப்பை போட்டிகள் அனைத்தும் டி20 போட்டிகளாக நடைபெற உள்ளன. இதன்காரணமாக இம்முறை ஆசிய கோப்பை தொடருக்கு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்