லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அடைந்த தோல்வி, ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியின் பிளேஆஃப் வாய்ப்புகளுக்கு பெரிய பின்னடைவை ஏற்ப்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

சிஎஸ்கே தோல்வி

தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட லக்னோ அணியிடம், சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. எகானா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் மிட்செல் மார்ஷ் வெறும் 38 பந்துகளில் 90 ரன்கள் குவித்து லக்னோவின் வெற்றிக்கு உதவினார். இதனால் 188 ரன்கள் இலக்கை லக்னோ அணி 16.4 ஓவர்களிலேயே எட்டியது. இந்தத் தோல்வியால் சிஎஸ்கே 12 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் நீடிக்கிறது. இப்போது ரசிகர்களின் ஒரே கேள்வி, சிஎஸ்கே இன்னும் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியுமா என்பதுதான்.

சிஎஸ்கேவின் தற்போதைய நிலை

சிஎஸ்கேவின் தற்போதைய நிலை மிகவும் எளிமையானது. அவர்கள் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு செய்தால் 16 புள்ளிகளுடன் முதல் நான்கு இடங்களுக்குள் வர வாய்ப்பு இருக்கும். இருப்பினும், இப்போது அவர்களின் வாய்ப்பு மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைச் சார்ந்தே இருக்கிறது. சிஎஸ்கே தனது இறுதி லீக் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு அணிகளும் பிளேஆஃப் ரேசில் வலுவாக உள்ளன. குஜராத் அதிகபட்சமாக 20 புள்ளிகளையும், ஹைதராபாத் 18 புள்ளிகளையும் பெற வாய்ப்புள்ளது.

Continues below advertisement

குறுக்கே வரும் கெளஷிக்

மற்ற அணிகளால் சிஎஸ்கேவிற்குச் சில சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் உள்ளது. அவர்களுக்கு இன்னும் டெல்லி, லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு எதிராக 3 போட்டிகள் உள்ளன. ராஜஸ்தான் மீதமுள்ள 3 போட்டிகளிலும் வென்றால், சிஎஸ்கேவின் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிடும். எனவே, ராஜஸ்தான் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது தோற்க வேண்டும் என சிஎஸ்கே விரும்பும். தற்போது சிஎஸ்கேவின் நிகர ரன் ரேட் +0.027 ஆக உள்ளது. இது மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக இருப்பதால், ரன் ரேட் அடிப்படையில் முன்னேறுவது சிஎஸ்கேவிற்கு சவாலான காரியம். அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் செயல்பாடுகளையும் சிஎஸ்கே கவனிக்க வேண்டியுள்ளது. பஞ்சாப் அணி தனது கடைசி இரண்டு போட்டிகளில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளைச் சந்திக்கிறது. பஞ்சாப் ஒரு போட்டியில் தோற்றால் கூட, அது சிஎஸ்கேவிற்குச் சாதகமாக அமையும்.

14 புள்ளிகளுடன் தகுதி பெறுவது சாத்தியமா?

ஒருவேளை சிஎஸ்கே ஒரு போட்டியில் தோற்று 14 புள்ளிகளுடன் தகுதி பெற முடியுமா என்று கேட்டால், அது மிகவும் சிக்கலானது. ஆர்சிபி, குஜராத் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் ஏற்கனவே 14 புள்ளிகளுடன் வலுவான ரன் ரேட்டில் உள்ளன. சிஎஸ்கே 14 புள்ளிகளுடன் உள்ளே நுழைய வேண்டுமானால், பஞ்சாப் கிங்ஸ் மீதமுள்ள 2 போட்டிகளிலும் தோற்க வேண்டும் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மீதமுள்ள 3 போட்டிகளில் 2-ல் தோற்க வேண்டும். இவை அனைத்தும் நடந்தாலும், சிஎஸ்கே தனது கடைசி போட்டியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரன் ரேட்டை உயர்த்தினால் மட்டுமே பிளேஆஃப் கனவு நனவாகும். சுருக்கமாகச் சொன்னால், சிஎஸ்கேவின் தலைவிதி இப்போது அவர்கள் கையில் மட்டும் இல்லை.