இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ள மகேந்திர சிங் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பல போட்டிகளில் ரசிகர்கள் தங்களுக்கு அபிமான அணி வெல்வதைக் காட்டிலும், தோனி விளையாடும் அணி வெற்றி பெறவேண்டும் என தோனியின் ரசிகர்கள் விரும்பும் அளவிற்கு அபரிமிதமான அன்பைப் பொழியக்கூடிய ரசிகர்கள் உள்ளனர்.


தலைமையின் முதன்மை பண்பு:


தோனிக்கு இப்படியான ரசிகர்கள் இருக்க காரணம் அவரது குணநலன். தோனி குறித்து அவருடன் விளையாடிய வீரர்கள் கூறும்போது வெளி உலகத்திற்கு தோனி குறித்து தெரியவருகின்றது. தோனி மீது உள்ள மதிப்பானது அவருடன் விளையாடியுள்ள மற்றும் விளையாடும் வீரர்கள் மட்டும் இல்லாமல் அவரது பல பேட்டிகளும் அவர் மீதான மதிப்பை சமூகத்தில் அதிகரிக்க வைத்துள்ளது. இந்தியாவின் முகமாக உள்ள தோனி ஒரு கேப்டனுக்கு எப்படிப்பட்ட மரியாதை கிடைக்க வேண்டும் என சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.


அதில் அவர், “ வீரர்களின் மரியாதையையும் விசுவாசத்தையும் சம்பாதிப்பது தலைமையின் முதன்மை பண்பாக அமைந்துள்ளது.  டிரெஸ்ஸெங் ரூமில் வீரர்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் அவர்களிடம் இருந்து விசுவாசத்தைப் பெறுவது கடினம். இது நீங்கள் களத்தில் என்ன செய்கிறீர்கள் அல்லது அவர்களுடன் நேரம் செலவிடும்போது என்ன செய்கிறீர்கள் என்பதைப் பற்றியது அல்ல. அது சக வீரர்களுடன் டிஸ்ஸிங் ரூமிலும் அவர்களுடன் தனியாக நேரம் செலவிடும்போதும் என்ன பேசுகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் உங்கள் மீது மரியாதையும் விஸ்வாசமும் வரும். 


நடத்தையால் மட்டுமே மரியாதை:


அதேநேரத்தில் ஒரு தலைவருக்கு அவரது வார்த்தைகள் மட்டும் இல்லாமல் அவரது செயலாலும் மரியாதை கிடைக்கின்றது. அதேநேரத்தில் மரியாதை ஒரு தலைவராக ஒரு இடத்தில் இருக்கும்போதோ அல்லது ஒரு நாற்காலிக்கோ தானாக கிடைக்காது. நமது நடத்தையால் மட்டும்தான் ஒரு தலைவனுக்கு மரியாதை கிடைக்கும். ஒரு தலைவன் மீது அவன் இருக்கும் பொறுப்புக்காக அவருக்கு மரியாதை கொடுக்கப்படுகின்றது என்றால், அவர் சொல்வதை வீரர்கள் சிறப்பாக செய்வார்களா என்பது கேள்விக்குறிதான். அதேநேரத்தில் விஸ்வாசத்தை பெற்றுவிட்டால் ஒரு தலைவன் சொல்வதை மிகச் சிறப்பாக வீரர்கள் செய்து முடிப்பார்கள். 


வீரர்களின் விஸ்வாசத்தைப் பெற அவர்களின் பலம் மற்றும் பலவீனத்தை நன்கு தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி அவர்களைப் பயன்படுத்தவேண்டும். சிலர் அழுத்ததை விரும்பலாம், சிலர் அழுத்தத்தை விரும்பமாட்டார்கள். ஒரு தலைவராக அனைவரது பலம் மற்றும் பலவீனங்களை தெரிந்து கொள்வது முக்கியம். இப்படியான தலைவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்” என  தெரிவித்துள்ளார்.