Cricketer Natarajan: கிராமங்களில் இருந்து நிறைய இளைஞர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க வேண்டும் - இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்

தமிழ்நாட்டில் கடைக்கோடியில் இருக்கும் பல இளைஞர்களை என்னைப்போல் உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவு - கிரிக்கெட் வீரர் நடராஜன்

Continues below advertisement

திருச்சியில் உள்ள ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா, கல்லூரி ஆர்.வி.அரங்கில்  நடைபெற்றது. கல்லூரி செயலர் கோ.மீனா தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன், இயக்குனர் எஸ்.அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கல்லூரி முதல்வர் கெஜலெட்சுமி, துணை முதல்வர் ஸ்ரீதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், யார்க்கர் மன்னன் என்ற புகழ்பெற்றவருமான நடராஜன் சிறப்பு விருந்தினராகவும், திருச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும், மீட்புத்துறையின் அலுவலர் அனுசுயா கவுரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர். கல்லூரி உடற்கல்வித்துறை இயக்குனர் நித்யா  விளையாட்டு ஆண்டு அறிக்கையை வாசித்தார்.  இதனை தொடர்ந்து கல்லூரி தலைமை செயல் அதிகாரி, நடராஜனை பாராட்டி பேசினார். பின்னர் கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசியதாவது: மாணவிகளாகிய நீங்கள் கல்லூரி அளவில் மட்டுமின்றி இந்திய அளவில் சாதனை செய்ய வேண்டும். பல திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள். எங்கிருந்தாலும் தனக்கான அடையாளத்தை உருவாக்க வேண்டும். கிராமங்களில் இருந்து நிறைய இளைஞர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க வேண்டும்.

Continues below advertisement


மேலும் ஒரு கிராமத்தில் இருந்து வந்து என்னால் சாதிக்க முடிந்தது என்றால், நீங்கள் இங்கிருந்து மிகப்பெரிய இடத்துக்கு செல்ல முடியும். அதற்கு நான் முன்னுதாரணம். கடைக்கோடியில் இருக்கும் பல இளைஞர்களை என்னைப்போல் உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவு. விளையாட்டு மட்டுமின்றி, நீங்கள் சாதிக்க விரும்பும் எந்த துறையானாலும் கடின உழைப்புடன் ஈடுபட்டால் வெல்ல முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து மாணவிகள் எழுப்பிய விளையாட்டு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அனைத்து இளநிலை துறையை சேர்ந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மூன்றாமாண்டு வணிகவியல் துறையைச் சேர்ந்த மாணவி நாகவர்ஷினி மற்றும் அனைத்து முதுநிலை துறையை சேர்ந்த மாணவிகளில் வெற்றி பெற்ற முதுநிலை இரண்டாமாண்டு இயற்பியல் துறையை சேர்ந்த மாணவி ஆர்.கே.ஷோபிகா ஆகியோருக்கு கோப்பைகள், கேடயங்களை வழங்கினார். பின்னர் கல்லூரியின் பல்வேறு துறை மாணவிகளுக்கு இடையேயான போட்டிகளில் அதிக புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்ற கணினி அறிவியல் துறை மாணவிகளுக்கு கேடயம் வழங்கியும், பல விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டுத்துறை பேராசிரியர்களுக்கும் பரிசுகளை வழங்கினார். முன்னதாக மாணவி நதியா வரவேற்றார். முடிவில் கல்லூரி மாணவி ஸ்ரீநிதி நன்றி கூறினார். இதில்  கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Continues below advertisement