இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக இந்திய அணியின் வீரர்கள் துபாயில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். இதனால் இந்தத் தொடரில் விராட் கோலியின் செயல்பாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இந்தியா-பாகிஸ்தான் போட்டியை எப்போதும் நாங்கள் உற்று நோக்கி பார்த்து இருப்போம். ஏன்னெறால் இந்த இரண்டு அணிகளும் இதுபோன்ற தொடர் அல்லாமல் தனியாக வெளியே விளையாடுவதில்லை. ஆகவே இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். இதற்கு முன்பாக என்ன நடந்திருந்தாலும் போட்டியின் போது எல்லாம் புதிதாக தான் தொடங்கும். இரண்டு அணிகளும் போட்டியை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்கும்.






 நாங்கள் அனைவரும் விராட் கோலி பழைய ஃபார்மிற்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகிறோம். அதேசமயம் நாங்கள் அவருடைய ஃபார்ம் குறித்து வருந்த தேவையில்லை. விராட் கோலியின் மனநிலை இப்போதும் மாறவில்லை. அவருடைய எண்ணம் தற்போது இந்தியாவிற்காக போட்டிகளை வென்று தருவதே என்று உள்ளது. அவர் எப்போதும் வெளியே இருப்பவர்களின் கருத்துகளை கேட்டு விளையாட மாட்டார். 


அவரைபோன்ற ஒரு உலக தரம் வாயந்த வீரருக்கு இது போன்ற நெருக்கடி புதிதல்ல. அவர் தற்போது சிறிய ஓய்விற்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவருடைய ஆட்டத்தில் சில மாற்றங்களை செய்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார். 


முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பயிற்சிக்கு செல்லும் போது அவருடன் பாகிஸ்தான் வீரர் ஷாஹின் அஃப்ரிதி பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் காயம் அடைந்துள்ள ஷாஹின் அஃப்ரிதியிடன் கோலி நலம் விசாரிக்கிறார். அதைத் தொடர்ந்து கோலி மீண்டும் ஃபார்மிற்கு திரும்ப ஷாஹின் அஃப்ரிதி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. ஷாஹின் அஃப்ரிதி காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். எனினும் அவர் பாகிஸ்தான் அணியுடன் அங்கு பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 






15 ஆசியக் கோப்பைக்கான தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதவுள்ளன. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் பாகிஸ்தான் - இந்திய அணிகளின் அனல் பறக்கும் மோதல் 28ம் தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கவுள்ள இந்த தொடரானது ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.  குரூப் போட்டிகளின் முடிவில் இரண்டு குரூப்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் விளையாடும்.


சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இம்முறை ஆசிய கோப்பை போட்டிகள் அனைத்தும் டி20 போட்டிகளாக நடைபெற உள்ளன. இதன்காரணமாக இம்முறை ஆசிய கோப்பை தொடருக்கு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.