Champions trophy IND vs NZ Final:சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்லப்போவது யார்? என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று துபாயில் நடக்கிறது. துபாயில் உள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் மகுடத்திற்கான மோதலில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பந்துவீசுகிறது. சாம்பியன்ஸ் டிராபியை 3வது முறையாக கைப்பற்றும் நோக்கத்தில் இந்தியாவும், சாம்பியன்ஸ் டிராபியை 2வது முறையாக கைப்பற்றும் நோக்கத்தில் நியூசிலாந்து அணியும் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றன. 

வெற்றி யாருக்கு?

2000ம் ஆண்டுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபியை வெல்லாத நியூசிலாந்து அணி வெற்றி பெற்றாக வேண்டும் என்றும், கடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த பிறகு மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்தியா வெறறி பெற வேண்டும் என்றும் முழு மூச்சில் களமிறங்கியுள்ளனர். 

ப்ளேயிங் வெலன்:

கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் சுப்மன்கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஷர் படேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி களமிறங்கியுள்ளனர். 

நியூசிலாந்து அணியில் கேப்டன் சான்ட்னர் தலைமையில் ரவீந்திரா, வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் ப்லிப்ஸ், ப்ராஸ்வெல், சான்ட்னர், நாதன் ஸ்மித், ஜேமிசன், வில்லியம் ஓரோர்க்கி ஆகியோர் களமிறங்குகின்றனர்.

சுழல் ஆதிக்கமா?

துபாய் மைதானம் சுழலுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்று கருதப்படுவதால் இன்றைய போட்டியில் வெற்றியைத் தீர்மானிப்பதில் பந்துவீச்சாளர்களின் பங்கு முக்கிய அங்கம் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இரு அணிகளிலும் சுழல் தாக்குதல் பலமாக இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது. 

இந்திய அணியில் ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்ஷர் படேல் மற்றும் வருண் சக்கவர்த்தி உள்ளனர். குறிப்பாக, வருண் சக்கரவர்த்தி இந்திய அணியின் துருப்புச்சீட்டாக உள்ளார். நியூசிலாந்து அணியில் கேப்டன் சான்ட்னர் அச்சுறுத்தலாக உள்ளார். இந்த தொடர் முழுவதும் பவுலிங்கில் அவர் அசத்தியுள்ளார். அவருடன் ப்ராஸ்வெல், ரவீந்திரா, ப்லிப்ஸ் உள்ளனர். 

வேகத்திலும் அசத்த இந்திய அணியில் முகமது ஷமியும், ஹர்திக் பாண்ட்யாவும் உள்ளனர். நியூசிலாந்து அணியில் நாதன் ஸ்மித், ஜேமிசன், வில்லியம் ஓரோர்க்கி உள்ளனர். 

பேட்டிங் எப்படி?

பேட்டிங்கைப் பொறுத்தவரை இரு அணிகளும் பலமாக உள்ளது. இந்திய அணியில் கேப்டன் ரோகித்சர்மா, சுப்மன்கில், விராட் கோலி, அக்ஷர் படேல், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல், ஜடேஜா உள்ளனர். இவர்களில் ரோகித் 20 ஓவர்கள் வரை களத்தில் நின்றால் ஆட்டத்தை இந்தியாவின் வசம் கொண்டு வருவார். சுப்மன்கில் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், இன்று சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். 

இந்த தொடரில் இந்திய அணியின் தூணாக திகழ்பவர் விராட் கோலி. சேசிங்கை நோக்கி களமிறங்கும் இந்திய அணிக்கு அவரது பங்களிப்பு தவிர்க்க முடியாதது ஆகும். அவரது ஆட்டம் வெற்றியைத் தீர்மானிக்கும் ஒன்றாக அமைந்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டியது அவசியம் ஆகும். 

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் வில் யங் - ரவீந்திரா ஜோடி சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். இந்த தொடரில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் ரவீந்திராவை விரைவில் அவுட்டாக்க வேண்டியது இந்திய அணிக்கு அவசியம் ஆகும். அனுபவ வீரர் வில்லியம்சன் லீக் போட்டியிலே இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக ஆடினார். இன்றைய போட்டியில் அவர் சிறப்பாக ஆடுவது நியூசிலாந்து அணிக்கு முக்கியம் ஆகும்.  டேரில் மிட்செல், டாம் லாதம் பேட்டிங்கின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது ஆகும். 

பின்வரிசை:

இந்திய அணியைப் பொறுத்தவரை பின்வரிசையில் பக்கபலமாக அக்ஷர் படேல், கே.எல்.ராகுல்., ஹர்திக் பாண்ட்யா உள்ளனர். குறிப்பாக, ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து தரும் பணியில் பாண்ட்யா - கே.எல்.ராகுல் உள்ளனர். இவர்கள் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். 

அதேபோல, நியூசிலாந்து அணியிலும் பின்வரிசையில் கிளென் ப்லிப்ஸ், ப்ராஸ்வெல், சான்டனர் பலமாக உள்ளனர். ப்லிப்ஸ் அதிரடியில் அசத்தும் வீரராக உள்ளார். அவரையும், பொறுப்புடன் ஆடும் சான்ட்னரையும் விரைவில் அவுட்டாக்க வேண்டியது இந்திய அணிக்கு மிக மிக அவசியம் ஆகும்.

இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் பார்க்கலாம்.