BCCI: இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம், வரும் டி-20 உலகக் கோப்பையுடன் முடிவடைய உள்ளது.


இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார்?


2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் அவர் பயிற்சியாளராக செயல்படுவார் என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.  51 வயதான டிராவிட்டிற்கு,  2023 ஒருநாள் உலகக் தொடருன் பதவிக்காலம் முடிந்தது.  இருப்பினும் வரும் ஜுன் மாதம் நடைபெற உள்ள,  டி-20 உலகக் கோப்பை வரை இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் தொடருவார் என பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் சுமார் ஒரு மாதத்தில் டிராவிட்டின் பயிற்சிக்காலம் முடிவடைய உள்ளது. இதனால், புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம். ஆனால் தனிப்பட்ட காரணங்களால் அவர் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்பவில்லை என கூறப்படுகிறது.


பாண்டிங், ஃப்ளெமிங்கிற்கு வலை வீசும் பிசிசிஐ?


அடுத்த தலைமை பயிற்சியாளர் 2027 ODI உலகக் கோப்பை வரை மூன்றரை வருட ஒப்பந்தத்தைப் பெறுவார். அனைத்து நிலைமைகள் மற்றும் வடிவங்களில் நீடித்த வெற்றிக்காக உலகத் தரம் வாய்ந்த இந்திய கிரிக்கெட் அணியை உருவாக்குவது உட்பட பல முக்கிய பொறுப்புகளை இந்த பாத்திரம் கொண்டுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு, ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்டீபன் ஃபிளெமிங்கை பிசிசிஐ அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவர்களின் பதில் மிகவும் சாதகமாக இல்லை என கூறப்படுகிறது. முன்னாள் நட்சத்திர வீரர்களான பாண்டிங் மற்றும் ஃப்ளெமிங் ஆகிய இருவருமே, ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக அனுபவம் வாய்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டீஃபன் ஃபிளெமிங் தற்போது இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். ரிக்கி பாண்டிங் டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இவர்களில் யாரேனும் ஒருவர்  இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக மாறினால், அவர்கள் ஐபிஎல் அணியுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள வேண்டும். எனவே, இந்திய அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் மற்றும் ஃப்ளெமிங் விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.


முந்தைய பயிற்சியாளர்கள்:


ஜான் ரைட், 2003 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வர முனேறியது உட்பட இந்தியாவை குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு வழிநடத்தினார். கேரி கிர்ஸ்டன், 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா கோப்பையை உறுதிப்படுத்த உதவினார். இருப்பினும், டங்கன் பிளெட்சருடன் தோல்வியுற்ற பிறகு பிசிசிஐ உள்நாட்டு பயிற்சியாளர்களை நியமிக்கத் தொடங்கியது.


ரவி சாஸ்திரியின் ஆட்சிக் காலத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் பெற்றது. ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை இறுதி வரை அணியை வழிநடத்தினர். இருப்பினும், இறுதிப் போட்டிகளில் வெற்றியைப் பெற இந்திய அணி தவறியது குறிப்பிடத்தக்கது.