தென்னாப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சுரியன் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் சதம் கடந்து 122* ரன்களுடன் களத்தில் இருந்தார். அவருடன் ரஹானே 40* ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார். 


 இரண்டாவது நாளான இன்று செஞ்சுரியனில் காலை முதல் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக போட்டி ரத்தானது. இந்நிலையில் பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் பேசுகின்றனர். வாக் தி டாக் என்ற பெயரில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. 






அதில்,ஷர்துல் தாகூர்,”நான் உங்களுடைய நிறைய நடன வீடியோவை பார்த்துள்ளேன் அது எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய நடன வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஆனால் அது எதுவும் உங்களுடைய வீடியோ அளவிற்கு சிறப்பானதாக இல்லை. நீங்கள் இதற்காக எதுவும் பயிற்சி எடுக்கிறீர்களா” என்று கேட்டார்.  அதற்கு ரவிச்சந்திரன் அஷ்வின்,“என்னுடைய வாத்தி கம்மிங் வீடியோ தான் அந்த அளவிற்கு வேகமாக வைரலானது. அதில் அந்த ஒரு ஸ்டெப் தான் மிகவும் ஹிட் அடித்தது.  ஒருவேளை நடிகர் விஜய் என்னை பார்த்து தான் இன்ஸ்பையராகி இந்த ஸ்டேப்பை போட்டிருப்பார் என்று நான் நினைக்கிறேன். 


அதேபோல் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஹரி ஆகியோருடன் எடுத்த நடன வீடியோவை நீங்களும் ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருடன் ஆடியதை பார்த்துத்தான் அந்த வீடியோவை வெளியிட்டேன்” எனத் தெரிவித்தார். அதன்பின்னர் இந்த வீடியோவில் ஷர்துல் தாகூர் வீசிய மெய்டன் ஓவர் குறித்தும் இவர்கள் பேசியிருந்தனர். இந்த வீடியோவை பிசிசிஐ கணக்கு பதிவிட்டத்து முதல் வேகமாக வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: பாக்சிங் டே சொதப்பல் டூ பாக்சிங்டே சதம் : கே.எல்.ராகுலும் டெஸ்ட் கிரிக்கெட்டும் !