இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக காமன் வெல்த் விளையாட்டில்  ஹாக்கி, குத்துச்சண்டை,  மல்யுத்தம், ஜிம்நாஸ்டிக்ஸ் உள்ளிட்ட பிற விளையாட்டு போட்டிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. ஆனால் இப்போது, காமன்வெல்த் போட்டிகளின் வரலாற்றில் முதன் முறையாக பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது.


ஆஸ்திரேலியாவிடம் ‘அடி’ வாங்கிய இந்தியா...


காமன் வெல்த் கிரிக்கெட் போட்டியின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி விளையாடியது. இப்போட்டியில் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தி வந்ததால் இந்திய அணிதான் வெற்றி பெரும் என பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசியில் ஆட்டமே மாறி போனது. தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்த ஆஸ்திரேலியா, கடைசி மூன்று ஓவரில் சிறப்பாக விளையாடி யாரும் எதிர்பார்த்திராத வெற்றியை பெற்றது. முதல் ஆட்டத்திலேயே ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த இந்திய அணி, இத்தோல்வியால் சற்று ஆட்டம் கண்டுதான் போனது. 


இந்தியாவிற்கு தொடர் வெற்றி!


ஆஸ்திரேலியாவிடம் முதல் போட்டியில் தோல்வி கண்ட இந்திய அணி அதற்கடுத்து விளையாடிய போட்டிகளில் சற்று சுதாரிப்போடு விளையாடியது.  இந்திய அணியின் ஆட்டத்தை கண்டு பிற நாடுகள் மிரண்டு போயின. இதற்கு பார்படாஸ் நாட்டுடன் நடந்த போட்டி சிறந்த எடுத்துக்காட்டு. இப்போட்டியில் பார்படாஸ் அணியை 100 ரன்களை சுருட்டி ‘மாஸ்’ காட்டியது இந்தியா. நேற்று இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர் கொண்டது. இதில் கூட, வழக்கம்போல ஆட்டத்தை விறுவிறுப்பாக கொண்டு போய் கடைசியில் இங்கிலாந்தை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ‘திரில்’ வெற்றி பெற்றது இந்தியா. இப்படி வெற்றி, திரில் வெற்றி என அனைத்தையும் கடந்து வந்த இந்தியா, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.




ஆஸ்திரேலிய அணியைப் பற்றி கூறவே வேண்டாம். அது எப்படியோ தெரியவில்லை, அவர்களுக்கு ஜெயிப்பது போல ஆட்டத்தைக் கொண்டு போய் தோற்பதும், தோற்பது போல் ஜெயிப்பதும், கை வந்த கலையாகிவிட்டது. காமன்வெல்த் போட்டியின் தொடக்கத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணியினருக்கு மிகவும் ராசியாகிவிட்டது போலும்.  அதற்கடுத்து அவர்கள் எதிர்கொண்ட எந்த நாடுகளையும் வெற்றி பெற விடாமல் இவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதற்கு சான்றாக பார்படாஸ், பாகிஸ்தான், நீயூசிலாந்து என அனைத்து நாடுகளுடனும் இவர்கள் ஆடிய வெறியாட்டத்தை கூறலாம். இப்படி வெற்றிக்கு மேல் வெற்றியைக் குவித்த ஆஸ்திரேலிய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 


இந்தியா-ஆஸ்திரேலியா இறுதிப்போட்டி!


காமன் வெல்த் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகளிடையே நடக்கும் இறுதிப்போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்றிரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கு முன் நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெறாத இந்திய அணி, இம்முறை ஆஸ்திரேலியாவிற்கு தக்க பதிலடி கொடுக்கம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் வென்றாலும் தோற்றாலும் இந்தியா பதக்கத்தை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Also Read|Commonwealth Cricket 2022: காமன்வெல்த்தில் பதக்கம் சேர்க்கும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி..


நட்சத்திர வீராங்கனைகள்:


ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையில் இன்று இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இதில் நட்சத்திர வீராங்கனைகளான ஸ்மிரிதி மந்தனா, ஆல் ரவுன்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ்,விக்கெட் வீராங்கனை தான்யா பாத்யா,  அதிரடி ஆட்டக்காரர்கள் ஷெபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ராஜேஷ்வரி கைக்வாட் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 


ஆஸ்திரேலிய அணிக்கு மெக் லேனிங் தலைமை வகிக்கிறார். ஆஸ்திரேலியாவின் அதிரடி விக்கெட் கீப்பர்கள் அலிசா ஹீலி, பெத் மூனி, அதிரடி ஆட்டக்காரர்கள் ரேச்சல் ஹெய்ன்ஸ், தஹ்லியா மெக்ராத் உள்ளிட்ட வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.