ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கித் தொடர் கடந்த 3ஆம் தேதி தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், சீனா, சௌத் கொரியா என மொத்தம் 6 அணிகள் விளையாடி வரும் இந்த தொடரில் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா மற்றும் மலேசியா அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டன. 


இந்நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் அடுத்த இரண்டு அணிகள் எவை எவை என்பதை இன்றைய போட்டிகள் தீர்மானிக்கவுள்ளன. தற்போதைய புள்ளிப்பட்டியலின்படி, மூன்றாவது இடத்தில் சௌத் கொரியாவும் 4வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன. இரு அணிகளும் 5 புள்ளிகள் பெற்றுள்ளன. கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் சௌத் கொரியா அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.  அதேபோல் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் ஜப்பான் மற்றும் சீனா அணிகள் உள்ளன. 


இன்றைய மூன்று போட்டிகளில் ஜப்பான் மற்றும் சீனா அணிகள்தான் முதலில் மோதின. இதில் சீனா அணி ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், ஜப்பான் அணிக்கு மட்டும் இந்த போட்டியில் 4 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது என்ற நிலையில் சீனாவை எதிர்த்து களமிறங்கியது. 


போட்டி துவங்கியதுமே, ஜப்பான் அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, குறிப்பாக பந்து அதிகப்படியான நேரம் ஜப்பான் அணியினர் வசம்தான் இருந்தது. இதனால் போட்டியின் 8வது நிமிடத்தில் ஜப்பான் அணியின் ஷோதா யமடா தனது அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் முதல் சுற்றிலேயே ஜப்பான் அணி முன்னிலை வகித்தது. அதன் பின்னர், முதல் சுற்று முடிவில் ஜப்பான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 


அதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றில் ஜப்பான் மற்றும் சீனா அணிகள் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. குறிப்பாக சீனா அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை தவறவிட்டது. இதனால் சீனா அணி போட்டியில் தனக்கு கிடைத்த நல்வாய்ப்பை வீணடித்துவிட்டது எனலாம். 


நான்வாது மற்றும் இறுதிச் சுற்றில் சீனா மற்றும் ஜப்பான் அணிகள் மிகவும் ஆக்ரோஷமாக ஆடின. இதனால் ஜப்பான் அணி தனது இரண்டாவது கோலை போட்டியின் 54வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி இரண்டாவது கோலை அடித்தது. இதனால் போட்டியில் பரபரப்பு எகிறியது. போட்டியின் 58வது நிமிடத்தில் சீன அணி ஒரு கோல் அடித்தது. இறுதியில் போட்டி 2-1 என்ற கணக்கில் முடிவு பெற்றது. இந்த போட்டியில் ஜப்பான் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஜப்பான் அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை ருசித்துள்ளது. அதேபோல், புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஜப்பான் அணி அரையிறுதிக்கு முன்னேறவேண்டுமானால், பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் மூன்று கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்திக்க வேண்டும்.