Chess World Cup 2023 Prize Money: 2023ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை செஸ் மகுடத்தை நார்வேவைச் சேர்ந்த வீரர் கார்ல்சன் வென்றுள்ளார். 


உலகக்கோப்பை செஸ் தொடரின் பரிசுத் தொகை மொத்தம் 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும். இதில் வெற்றி பெற்றவருக்கு பரிசுத் தொகையில் 60% வழங்கப்படும். தோல்வியைத் தழுவியவருக்கு 40% வழங்கப்படும். அதாவது வெற்றி பெற்ற கார்ல்சனுக்கு 1.20 மில்லியன் அமெரிக்க டாலர்களும் தோல்வி அடைந்த பிரக்ஞானந்தாவுக்கு 80 ஆயிரம் அமெரிக்க டாலர்களும் பரிசுத் தொகையாக வழங்கப்படும். அதாவது கார்ல்சன் இந்திய மதிப்பில் சுமார் 1 கோடி ரூபாயும் (99 லட்சங்கள்), பிரக்ஞானந்தாவுக்கு சுமார் 66 லட்சம் வழங்கப்படவுள்ளது. 


 


செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி கிளாசிக்கல் சுற்றில் பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சன் மோதிய இரண்டு ஆட்டங்களும் டிராவில் முடிந்தது. இந்தநிலையில், உலக போப்பை செஸ் போட்டியில் யார் சாம்பியன் என்பதை தீர்மானிக்கும் வகையில் இன்று குறுகிய சுற்று போட்டியை கொண்ட டை-பிரேக்கர் நடைபெற்றது. 


போட்டி தொடங்கியது முதல் இருவரும் சிறப்பாக ஆடிவந்தனர். மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த சுற்றில் நார்வே வீரர் கார்ல்ஸன் வெற்றி பெற்று முன்னிலை வகித்தார்.  மூன்று சுற்றுகள் வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த டை-பிரேக்கர் போட்டியில் முதல் சுற்றில் கார்ல்சன் முன்னிலை வகித்தார். இதனால் இரண்டாவது சுற்றில் பிரக்ஞானந்தா வெல்ல வேண்டும் அல்லது டிரா செய்ய வேண்டும். மாறாக பிரக்ஞானந்தா தோல்வியைத் தழுவினால் நார்வே வீரர் கார்ல்சன் உலகச் சாம்பியனாவார் என்ற நெருக்கடியில் பிரக்ஞானந்தா களமிறங்கினார். 


இரண்டாவது சுற்றில் பிரக்ஞானந்தா முதல் சுற்றைப் போலவே நேரத்தை வீணடித்துக்கொண்டு போக, இதனை தனக்கு சாதகமாக கார்ல்சன் பயன்படுத்திக்கொண்டார். இதனால் இரண்டாவது சுற்றிலும் கார்ல்சன் வெற்றி பெற்றார். இதனால் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற செஸ் உலகக்கோப்பை தொடரின் சாம்பியனாக நார்வேவைச் சேர்ந்த கார்ல்சன் மகுடம் சூடியுள்ளார். இவர் ஏற்கனவே சர்வதேச செஸ் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


டை - பிரேக்கர் (Tie - Breaker) 


போட்டியிடும் ஒவ்வொரு வீரருக்கும் தலா 25 நிமிடங்கள் வழங்கப்படும். அதில், ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 10 வினாடி என அதிகரிக்கப்படும்.  இந்த முறையிலும் எந்தவொரு வீரரும் வெற்றியாளராக ஆகவில்லை என்றால், ஒவ்வொரு வீரருக்கும் 10 நிமிட நேரக் கட்டுப்பாட்டுடன் வீரர்கள் மேலும் இரண்டு கேம்களை விளையாடுவார்கள். இதிலும்,  ஒவ்வொரு வீரரும் நகர்வு 1ல் தொடங்கி, ஒரு நகர்வுக்கு 10 வினாடிகள் அதிகரிப்பைப் பெறுவார்கள். 


இப்படியான விதிகள் கொண்ட சுற்றில் பிரக்ஞானந்தா ஒவ்வொரு நகர்த்தலுக்கும் அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் அவருக்கு அடுத்த நகர்தலுக்கு நேரம் இல்லாமல் போனது. இதனாலே அவர் தோல்வியைத் தழுவினார்.