சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் - 2023 போட்டி, சென்னை லீலா பேலாஸில் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. 


இது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்-2023 போட்டி, சென்னை லீலா பேலஸில் 2023 டிசம்பர் மாதம் 15 முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.


இந்தப் போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொண்டு 7 ரவுண்ட்-ராபின் சுற்றுகள் கிளாசிக் செஸ் வகையில் விளையாடுவார்கள். இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.50 இலட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவுள்ளது.


இந்தியாவின் தலைசிறந்த செஸ் கிராண்ட்மாஸ்டர்களான டி.குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி போன்ற வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதிபெற வாய்ப்பாக அமையும் மேலும் சர்வதேச கிராண்ட்மாஸ்டர்கள் பர்ஹாம் மக்சூட்லூ, பி. ஹரிகிருஷ்ணா, லெவோன் அரோனியன், பாவெல் எல்ஜனோவ், அலெக்சாண்டர் ப்ரெட்கே. மற்றும் ஸ்ஜுகிரோவ் சனான் போன்ற வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.


செஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது. தற்போது இந்தியாவில் உள்ள கிராண்ட்மாஸ்டர்களில் மூன்றில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, பிரக்ஞானந்தா. டி. குகேஷ் மற்றும் சமீபத்திய கிராண்ட்மாஸ்டர் வைஷாலி போன்ற வீரர்களுடன் தொடர்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ரூபாய் 100 கோடி செலவில் சர்வதேச வீரர் வீராங்கனைகள் பங்கேற்ற ’செஸ் ஒலிம்பியாட்’ நடத்தப்பட்டது. இது தமிழ்நாடு அரசிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித் தந்தது என்றே குறிப்பிட வேண்டும். செஸ் ஒலிம்பியாட்டில் கலந்து கொண்ட சர்வதேச வீரர்கள் தமிழ்நாட்டினை பாராட்டினர். இந்த செஸ் ஒலிம்பியாட் மாமல்ல புரத்தில் நடைபெற்றது. 


ஃபார்முலா - 4 கார் ரேஸ்


இந்தியாவில் முதல்முறையாக ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் நடைபெற உள்ளது. . ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா-4 சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு கொண்ட சாலையில் இரவு போட்டியாக இந்த கார் பந்தயம் நடத்தப்பட முடிவு செய்யப்பட்டது. தீவுத்திடலில் தொடங்கும் கார் பந்தயமானது அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலை சென்றடைவது போல இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.


இந்த போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில்  முதல்முறையாக இரவுப் போட்டியாக சாலை வழியாக நடத்தப்படு கார் பந்தயம் இது என்பதால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். எனவே தமிழ்நாடு அரசு கார் பந்தயம் தொடர்பான முன்னேற்பாடுகளை முழு வீச்சில் செய்து வந்தது.


இந்நிலையில் கடந்த டிசம்பர் 3 மற்றும் டிசம்பர் 4 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் மாநகரம் முழுவதும் வெள்ள நீர் தேங்கியதோடு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை. இதன் காரணமாக டிசம்பர் 9,10 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த கார் பந்தயம் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிக்கு மாற்றப்பட்டது. 


இதற்கிடையில் ஒருபக்கம் நிவாரணப்பணிகள் முழு வீச்சில் சென்று கொண்டிருக்க, மறுபுறம் கார் பந்தயத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளியான தகவல் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தயம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.